ஆப்நகரம்

வரலாறு படைத்த ரிஷப் பந்த்…விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மெகா சாதனை!

டெஸ்ட் தரவரிசையில் ரிஷப் பந்த் டாப் 10 இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

Samayam Tamil 7 May 2021, 12:16 pm
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 6ஆவது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதுவரை வேறு எந்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் டாப் 10 இடத்திற்குள் நுழைந்தது கிடையாது.
Samayam Tamil ரிஷப் பந்த்


ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இடம்பெற்றிருந்த ரிஷப் பந்த், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்போது, அதிரடி நாயகனாக உருவெடுத்து, முன்னணி பந்துவீச்சாளர்கள் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் போன்றவர்களை வெளுத்து வாங்கினார்

குறிப்பாக, தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் இடத்தில் இருந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் 138 பந்துகளில் 89 ரன்கள் விளாசி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இதே பார்முடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கிய ரிஷப் பந்த், எதிர்பார்த்தபடியே மிரட்டலாக விளையாடினார். முதல் டெஸ்டில் 92, 58 என விளாசிய இவர், அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் சதம் விளாசி, டெஸ்ட் அரங்கில் தனது மூன்றாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். அடுத்து டி20 கிரிக்கெட்டிலும் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். ஒருநாள் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயருக்கு மாற்றாகக் களமிறங்கிய இவர், வெறும் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அதிரடி காட்டியிருந்தார்.

ரிஷப் பந்த் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்ததால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்படும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தலைமையிலான டெல்லி அணி 8 போட்டிகளில் பங்கேற்று 6 வெற்றிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. கொரோனா பரவல் காரணமாக எஞ்சிய போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் மீண்டும் செப்டம்பர் மாதம் நடத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள், காயத்தால் அவதிப்பட்டு வரும் டெல்லி அணி முன்னாள் கேப்டன் ஸ்ரேயஷ் ஐயர் குணமடைய அதிக வாய்ப்புள்ளது. இதனால், டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டுவரும் ரிஷப் பந்த் மாற்றப்பட்டு மீண்டும் ஸ்ரேயஷ் ஐயர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்