ஆப்நகரம்

சூப்பர் ஓவர் என்னும் நாடகம்... என்னதான் நடந்தது?

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக...

Samayam Tamil 19 Oct 2020, 9:24 pm
ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்கள் நடைபெற்றது இதுவே முதல் முறை. குறிப்பாக மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது. நேற்றைய இரண்டு போட்டிகளிலும் அப்படி என்னதான் நடந்தது?
Samayam Tamil three thrilling super overs played in a single day in 18th october know what happened
சூப்பர் ஓவர் என்னும் நாடகம்... என்னதான் நடந்தது?


லாக்கி பெர்குசனின் அந்த ஒரு ஓவர்!

ஹைதராபாத் - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான நேற்றைய முதல் போட்டியில் இரண்டாவதாக விளையாடிய ஹைதராபாத் அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்ததால் போட்டி சமநிலை ஆனது. வார்னர் களத்தில் இருந்தும் அந்த அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. குறிப்பாக கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதனால் சூப்பர் ஓவரை வீசும் வாய்ப்பு பெர்குசனுக்குக் கொடுக்கப்பட்டது. ஹைதராபாத் அணியின் இரண்டு விக்கெட்டுகளையும் வெறும் 2 ரன் மட்டுமே கொடுத்து பெர்குசன் வீழ்த்தினார். கொல்கத்தா அணி மிக எளிதில் இந்த இலக்கை சேஸ் செய்து வெற்றிபெற்றது.

மும்பை vs பஞ்சாப்!

மும்பை பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான நேற்றைய இரண்டாவது போட்டியில் 177 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் அணியால் 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ட்ரெண்ட் போல்ட் வீசிய கடைசி ஓவர் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் லாங் ஆன் திசையில் அடித்த கிறிஸ் ஜோர்டன் இரண்டாவது ரன்னைப் பூர்த்தி செய்வதற்குள் ரன் அவுட் செய்யப்பட்டார். இரண்டாவது ரன்னுக்கு ஜோர்டன் ஓடிய விதம் விவாதத்தை ஏற்படுத்தியது. அவர் நீண்ட தொலைவு சுற்றிச் சென்று கீரிஸைத் தொட்டு ஓடியதால் சுலபமான இரண்டாம் ரன் வாய்ப்பை நழுவவிட்டு ரன் அவுட் ஆனதோடு, வெற்றி வாய்ப்பையும் நழுவவிட்டார். இதனால் போட்டி சமநிலை ஆனது.

பூம் பூம் பும்ரா!

நேற்றைய நாளின் 2ஆவது சூப்பர் ஓவர் தொடங்கியது. பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் லோகேஷ் ராகுலும் நிகோலஸ் பூரனும் களமிறங்கினர். மும்பை அணிக்காக பும்ரா அந்த ஓவரை வீசினார். 2ஆவது பந்தில் பூரன் ஆட்டமிழக்க கடைசி பந்தில் ராகுலும் அவுட் ஆனார். இந்த ஓவரில் பவுண்டரி எதுவும் இல்லை. வெறும் 5 ரன்கள் மட்டுமே. நான்கு புல் டாஸ் பந்துகளை பும்ரா வீசியும் அதை பஞ்சாப் பேட்ஸ்மென்கள் பவுடரிக்கு விரட்டத் தவறினர்.

ஷமி என்ன சளைத்தவரா?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளராகக் கருதப்படும் பும்ரா தனது திறமையை நிரூபித்து பஞ்சாப் அணியை 5 ரன்களுக்குச் சுருட்டி மும்பைக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். இந்தியாவின் மற்றொரு வேகப்புயல் முகமது ஷமி, பும்ராவுக்கு தான் சற்றும் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சூப்பர் ஓவரை வீசினார். மும்பை அணியின் துவக்க ஜோடியாக ரோஹித் ஷர்மாவும் குவிண்டன் டி காக்கும் களமிறங்கினர். சூப்பர் ஓவரை ஷமி வீச, வெறும் 5 ரன்னில் சுருட்டி சமநிலையில் ஆட்டத்தை முடித்து வைத்தார். அவர் வீசிய ஆறு பந்துகளும் மிகத் துல்லியமான யார்க்கர் பந்துகளாகும்.

சூப்பர் ஓவருக்கே சூப்பர் ஓவர்!

சூப்பர் ஓவர் விதிமுறைப்படி, முதல் சூப்பர் ஓவர் சமநிலையில் முடிந்து அடுத்த சூப்பர் ஓவர் விளையாடப்பட்டால் முதலில் பயன்படுத்திய பேட்ஸ்மேன்களையோ பந்துவீச்சாளர்களையோ மீண்டும் பயன்படுத்த முடியாது. இதன்படி, பும்ராவும் ஷமியும் இப்போது பந்துவீச முடியாது. அதேபோல, ராகுல், பூரன், ரோஹித், டிகாக், ஹூடா போன்றவர்கள் இப்போது பேட்டிங் செய்ய முடியாது. பொல்லார்டும் ஹார்திக் பாண்டியாவும் களமிறங்கினர். கிறிஸ் ஜோர்டானுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. இந்த ஓவரில் மும்பை அணி மொத்தம் 11 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் பொல்லார்ட் சிக்ஸருக்கு தூக்கி அடிக்க அதை அற்புதமாகத் தடுத்த மாயங்க் அகர்வால் வெறும் 2 ரன்னாகக் கட்டுப்படுத்தினார்.

போல்ட்டைக் கழட்டிய யுனவர்சல் பாஸ்!

பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்கு 12. இந்த ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார். தொடக்க போட்டியில் ஆட்டத்தின் கடைசி ஓவரை போல்ட் மிகச் சிறப்பாக வீசி சமநிலையில் முடித்து வைத்ததால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் பந்தை அவர் புல் டாஸாக வீச, அதை லாங் ஆன் திசையில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல். இப்போது பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. 3ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மாயங்க் அகர்வால் வெற்றி வாய்ப்பை சுலபமாக்கினார். நான்கு பந்துகளிலேயே பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்