ஆப்நகரம்

Ind vs Sl 1st T20: எப்படி ஜெயித்தது இந்தியா? இலங்கை செய்த 3 முக்கியத் தவறுகள் இதோ!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய பௌலர்கள் அபாரமாகச் செயல்பட்டனர்.

Samayam Tamil 26 Jul 2021, 7:03 am
இந்தியா, இலங்கை இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஓபனர் பிரித்வி ஷா கோல்டன் டக்-ஆனார். அடுத்து ஷிகர் தவன் (46), சூர்யகுமார் யாதவ் (50) இருவரும் சிறப்பாக விளையாடியதால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 164/5 ரன்கள் சேர்த்தது.
Samayam Tamil இலங்கை அணி


இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இலங்கை அணியில் அசலங்கா (44) மட்டுமே சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் மட்டுமே அதிகபட்சமாக 26 ரன்கள் அடித்தார். இதனால், இலங்கை அணி 18.3 ஓவர்கள் முடிவில் 126/10 ரன்கள் மட்டும் சேர்த்து, 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. புவனேஷ்வர் குமார் 4/22 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இப்போட்டியில் இலங்கை அணி செய்த மூன்று முக்கியத் தவறுகள் குறித்து தற்போது பார்ப்போம்:

மிடில் ஓவர்களில் ரன் கசிவு:

இலங்கை அணி முதல் ஓவரில், முதல் பந்திலேயே பிரித்வி ஷாவை பெவிலியனுக்கு அனுப்பியது. அடுத்து 7ஆவது ஓவரில் வனிந்து ஹசரங்கா, சிறப்பாகப் பந்துவீசி சஞ்சு சாம்சனை வீழ்த்தினார். இதனால், இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 59/2 என இருந்தது.

அடுத்த நான்கு ஓவர்களில் (9 முதல் 12) இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டத் துவங்கினர். அதற்கேற்றாற்போல், இலங்கை பௌலர்களும் சரியான லைனில் பந்துவீசவில்லை. 9ஆவது ஓவரை வீசிய ஸ்பின்னர் ஹசராங்கா, பந்துகளை மேலே ஏத்தி போட்டும், ஷார்ட் பந்துகளை வீசியும் ரன்களை வாரி வழங்கினார். அடுத்து உதானாவும் புல்-டாஸ், ஷாட் பால்களை வீசி ரன்களை விட்டுக்கொடுத்தார். இதனால் மிடில் ஓவர்களில் 24 பந்துகளில் 42 ரன்கள் பறந்தது. இதைக் கட்டுப்படுத்தியிருந்தால், இந்திய அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தியிருக்கலாம். இலங்கை அணி டெத் ஓவர்களில் அசத்தலாகப் பந்துவீசியது.

துவக்கத்தில் சொதப்பல்:

165 ரன்கள் இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இலங்கை அணியில் முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக சோபிக்கவில்லை. அவிக்ஷா பெர்ணான்டோ (26), பனுகா (10), தனஞ்ஜெயா டி சில்வா (9) ஆகியோர் சொதப்பியதால், பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் அதிகரித்தது.

அசலங்காவுக்கு அழுத்தம்:

அசலங்கா மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். கிடைக்கும் பந்துகளை பவுண்டரி விரட்டி, இந்திய பௌலர்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இவருடன் ஒரு இலங்கை பேட்ஸ்மேன் கூட பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. அனைவரும் ஒற்றை இலக்கை ரன்கள் மட்டும் அடித்து பெவிலியன் திரும்பினார்கள். இதனால், அசலங்கா அழுத்தங்களுடன் விளையாடி, அடிக்கடி பெரிய ஷாட்களுக்கு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இறுதியில் புல்-ஷாட் ஆட முற்பட்டு பவுண்டரி லைனில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இவருடன் ஒருவராவது பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால், இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். அசலங்கா 26 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்