ஆப்நகரம்

ஃபிஞ்ச், ஸ்மித் மிரட்டல் சதம்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Samayam Tamil 27 Nov 2020, 6:25 pm
சிட்னியில் நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 374 ரன்கள் சேர்த்தது. மெகா இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 308 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Samayam Tamil ind vs aus


முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், துவக்க வீரர்கள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்திய பௌலர்கள் கடுமையாகப் போராடியும் இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியவில்லை. இருவரும் அரைசதம் கடந்து 156 ரன்கள் சேர்த்து நிலையான துவக்கம் தந்தனர். இறுதியில் முகமது ஷமி வீசிய பந்தில், 76 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் சேர்த்த டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித், ஃபிஞ்சுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார்.

இந்திய பௌலர்கள் இவர்களை பெவிலியனுக்கு அனுப்ப படாத பாடு பட்டனர். கடைசியில் ஒருவழியாக ஃபிஞ்ச் 124 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 114 ரன்களும், ஸ்மித் 11 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 105 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். 5ஆவது வரிசையில் களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 374 ரன்கள் குவித்தது.

375 ரன்கள் மெகா இலக்கைக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. மயங்க் அகர்வால் (22), விராட் கோலி (21), ஷ்ரேயஸ் ஐயர் (2), கே.எல்.ராகுல் (12) ஆகியோர் நிலைத்து நின்று விளையாடத் தவறினர். இறுதியில் துவக்க வீரர் ஷிகர் தவன், ஹார்திக் பாண்டியா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்து வந்தனர். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி கடுமையாகப் போராடி இருவரையும் வெளியேற்றியது.

தவன் 86 பந்துகளில் 10 பவுண்டரிகள் விளாசி 74 ரன்கள் சேர்த்த நிலையிலும், ஹார்திக் பாண்டியா 76 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர் விளாசி 90 ரன்கள் குவித்தும் ஆடம் ஜாம்பாவிடம் வீழ்ந்தனர். அடுத்து களமிறங்கிய ஜடேஜா (25), சைனி (29), முகமது ஷமி (13) போன்றவர்கள் ஓரளவுக்கு மட்டுமே ரன்களைச் சேர்த்தனர். இதனால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 308 ரன்கள் மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

ஜோஸ் ஹேசில்வுட் மூன்று விக்கெட்களையும், ஆடம் ஜாம்பா நான்கு விக்கெட்களையும் சாய்த்தனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்