ஆப்நகரம்

‘இலங்கை சரண்டர்’ பட்டைய கிளப்பிய வங்கதேசம்...தொடரைக் கைப்பற்றி அசத்தல்!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றி அசத்தியது.

Samayam Tamil 25 May 2021, 9:33 pm
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 121 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. முதல் போட்டியிலும் வங்கதேசம் வென்ற நிலையில், தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றியுள்ளது. முதலில் களமிறங்கிய வங்கதேசம் 246/10 ரன்கள் அடித்தது. அடுத்துக் களமிறங்கிய இலங்கை அணியால் 141 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
Samayam Tamil வங்கதேசம்


வங்கதேசம் தரப்பில் ஓபனர்களாக தமீம் இக்பால், லிடன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். இக்பால் 13 ரன்களும், தாஸ் 25 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார்கள். தொடர்ந்து ஷகிப் அல் ஹசனும் டக்-அவுட் ஆனதாலும், ஹொசைன் (10) வந்த வேகத்தில் நடையைக் கட்டியதாலும் வங்கதேசத்திற்கு துவக்கத்திலேயே (74/4) பலத்த அடி விழுந்தது.

இதனை சமாளிக்கும் வகையில் விளையாடிய முஷ்பிகுர் ரஹூம், முகமதுல்லா இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இவர்களை வீழ்த்த இலங்கை கடுமையாகப் போராடியது. இறுதியில் முகமதுல்லா 41 ரன்கள் சேர்த்து சன்டகன் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். இருப்பினும், மறுமுனையில் அதிரடி காட்டிய ரஹீம் 127 பந்துகளில் 125 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை அதிரடியாய் உயர்த்தினார். டெய்ல் என்டர்ஸ் சிறப்பாக சோபிக்கவில்லை சைஃபுதீன் மட்டும் 30 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்து ரஹீமுக்கு பக்கபலமாக இருந்தார்.

இறுதியில் வங்கதேச அணி 48.1 ஓவர்கள் முடிவில் 246 ரன்கள் சேர்த்தது. இலங்கை பௌலர்கள் சமீரா, சன்டகன் இருவரும் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்கள். மைதானம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருப்பதாலும், வங்கதேச பௌலர்கள் நல்ல பார்மில் இருப்பதாலும் இலங்கை அணி இந்த இலக்கை அடைய கடுமையாகப் போராடியாக வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்திருந்தார்கள். அதன்படியே போட்டி நகர்ந்தது.

இலங்கையில் முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் குணதிலகா (24), குஷல் பெரேரா (14), பதும் நிஷங்கா (20) போன்றவர்கள் படுமோசமாக சொதப்பினர். இதனால், நடுவரிசி பேட்ஸ்மேன்கள் அழுத்தங்களுடன் விளையாடும் நிலை ஏற்பட்டது. ஒருவர் கூட சிறப்பாக சோபிக்கவில்லை. இதனால், இலங்கை அணியால் 38 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இறுதியில் வங்கதேச அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் வெற்றிபெற்றிருந்தது. தற்போது இப்போட்டியில் வெற்றிபெற்றிருப்பதால், 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்