ஆப்நகரம்

தோனி எல்லாத்துக்கும் ரெடிதான்: பயிற்சியாளர் ப்ளெமிங் கருத்து

பல நேரங்களில் நாம் ஆட்டத்தின் இறுதிவரை சென்று போராடி வெற்றிபெற்றுள்ளோம். அதற்கு முக்கிய காரணம், அனுபவ வீரர்கள்தான்.

Samayam Tamil 19 Sep 2020, 11:30 am
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுபெற்றாலும், இன்னும் உலகத்தர வீரராகத்தான் உள்ளார். மனதளவிலும், உடல் அளவிலும் ஐபிஎல் தொடரை எதிர்கொள்ளத் தயாராக உள்ளார் என்று பயிற்சியாளர் ப்ளெமிங் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil dhoni


இன்று இரவு 7:30 மணிக்குத் தொடங்கவுள்ள முதல் லீக் போட்டியில் சென்னை அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள உள்ளது.

சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்களால் எப்பேர்ப்பட்ட நெருக்கடி நிலைகளிலும் பதற்றமில்லாமல் விளையாட முடியும் எனக் கூறினார். நீண்ட ஓய்வுக்குப் பிறகு, தோனி களமிறங்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து பேசிய அவர், “அவர் இன்னும் உலகத்தரம் வாய்ந்த வீரராகத்தான் இருக்கிறார். மனதளவிலும், உடல் அளவிலும் தயார் நிலையில் உள்ளார்” என்று கூறினார்.

மூத்த வீரர்களை கொண்டுள்ள சென்னை அணியில் தோனி, ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ் மற்றும் இம்ரான் ஆகியோர் 35 வயதைக் கடந்தும் நல்ல தகுதியுடன் உள்ளனர் என்றார். “அனுபவ வீரர்கள்தான் அணிக்கு பக்கபலமாக இருப்பார்கள். தன்னுடைய அனுபவங்களைப் பயன்படுத்தி ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள். இதனால்தான், அவர்கள் மதிப்பு மிகுந்தவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்” என்று ப்ளெமிங் கூறினார்.

“பல நேரங்களில் நாம் ஆட்டத்தின் இறுதிவரை சென்று போராடி வெற்றிபெற்றுள்ளோம். அதற்கு முக்கிய காரணம், அனுபவ வீரர்கள்தான். இவர்களுடன் துடிப்பான இளம் வீரர்களும் இணையும்போது அணி முழுமையடைந்ததாக மாறிவிடும்” எனக் கூறினார்.

சென்னை Vs மும்பை: யார் கை ஓங்கியுள்ளது?

கடந்த வருடம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வி கண்டது. இதனால், முதல் லீக் போட்டி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிப ப்ளெமிங், முதல் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

“முதல் போட்டி எப்போதுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில்தான் இருக்கும். அதுவும் மும்பையுடன் மோதும்போது இயல்பாகவே கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் செய்த தவறுமூலம் நிறைய கற்றுள்ளோம். அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம். விட்டதில் இருந்து தொடங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கூறினார்.

“முதல் போட்டியில் விளையாடியதை வைத்து அணியின் தன்மையைப் புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். நிச்சயம், இது அணியை மேம்படுத்த உதவும். அரபு மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவதால் பாதிப்புகள் எதுவும் எங்களுக்கு ஏற்படாது. நிச்சயம் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கோப்பை வெல்ல முயற்சிப்போம்” எனத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்