தென் ஆப்பிரிக்கா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்க ரசிகர்கருடன் வாய் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 311 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க அணியில் எல்கர் அதிகபட்சமாக 141 ரன்களை குவித்தார்.
இதையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்களை இழந்து 245 ரன்களை குவித்து, 66 ரன்கள் பின் தங்கி உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். அவர் 30 ரன்கள் எடுத்திருந்தபோது, ரபாடா அவரை போல்டாக்கி வெளியேற்றினார். அப்போது, ஆஸ்திரேலிய அணியின் அறைக்கு திரும்பியபோது தென் ஆப்பிரிக்க ரசிகர் ஒருவர் வார்னர் முன் கைத்தட்டி அவரை திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வார்னர், அந்த ரசிகரை திட்ட ஆரம்பித்ததால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. இதன்பின், அங்கு வந்த பாதுகாவலர்கள் அவரை சமரசம் செய்து அனுப்பினர். முந்தைய டெஸ்ட் போட்டியில், டி காக் உடன் வார்னர் சண்டையிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.