முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் சம்மதம் தெரிவித்தது. இது பல ஆண்டு முயற்சிக்கு பின் இந்திய அணி பங்கேற்கும், முதல் டே- நைட் டெஸ்ட் போட்டியாகும்.
ஹசினா வருகை.....
இந்நிலையில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை மேலும் சிறப்பானதாக மாற்ற கொல்கத்தா கிரிக்கெட் போர்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சவுரவ் கங்குலி அழைப்பு விடுத்தார். கங்குலியின் அழைப்பை அவரும் ஏற்றுக்கொண்டார்.
50 வகை உணவுகள்.....
இதையடுத்து அவருக்கு சுமார் 50 வகை உணவுகளுடன் பிரமாண்ட விருந்து வைக்க, கொல்கத்தா கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது. தவிர, இப்போட்டிக்கு டாஸ் போட தங்க நாணயம் பயன்படுத்தப்படவுள்ளது. அதேபோல சிறப்புவிருந்தினர்களுக்கு வெள்ளி நாணயம் சிறப்பு பரிசாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன? என்ன?
இந்த விருந்தில் கங்கையின் ஹல்சா (மீன்), பத்மா (மீன்) மசாலா, ஈரால் மற்றும் மேற்கு வங்கத்தின் பாரம்பரிய உணவு வகைகளான சுக்தோ, உருளைக்கிழங்கு பாஸ்தா, காலிபிளவர் வருவல், புலாவ், பாயாசம், மற்றும் கோழிக்கறி, ஆட்டுக்கறி உட்பட பலவகை உணவுகள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படவுள்ளது. இந்த உணவுவகைகளை கொல்கத்தா கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல் பணியாளர்களுடன் சேர்ந்து சிறப்பாக உருவாக்கிய மெனுவாகும்.
இறுதி முடிவு தலைவன் தான்...
இந்த உணவுவகைகள் பிசிசிஐ தலைவர்[ கங்குலியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். அதை கங்குலி இறுதி செய்வார் என தெரிகிறது. ஹசினாவுக்கு வழங்க பிரத்யேகமாக டிசைனர் சேலை உருவாக்கப்பட்டுவருகிறது. மேலும் ஷால், இதர பரிசுப்பொருட்களும் நிகழ்ச்சியின் போது வழங்கப்படவுள்ளது.
சூடுபிடிக்கும் டிக்கெட் விற்பனை
இதற்கிடையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான முதல் நாள் டிக்கெட் விற்பனை துவங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே முழுமையாக விற்றுத்தீர்ந்தது. மேலும் இப்போட்டியின் முதல் இரண்டு நாட்களில் முன்னாள் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.