ஆப்நகரம்

Hardik Pandya: பாண்டியா, ராகுல் சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் கிரிக்கெட் வீரர்கள் பேசிய வழக்கு, இன்று விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

Samayam Tamil 5 Feb 2019, 1:01 pm
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினர்.
Samayam Tamil Rahul


இதனால் ஏற்பட்ட பரபரப்பை அடுத்து, போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்து பிசிசிஐ உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் தங்கள் கருத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். இதற்கிடையில் பாண்டியா, ராகுல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நானே பொறுப்பு என்று கரண் ஜோஹர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாண்டியா மற்றும் ராகுலுக்கு 2 போட்டிகளுக்கு தடை விதிப்பதற்கு வினோத் ராய் பரிந்துரை செய்தார். ஆனால், நிர்வாகக் குழுவின் மற்றொரு உறுப்பினர் டயானா எடுல்ஜி, பிசிசிஐ-யின் சட்ட வல்லுநரிடம் எடுத்து சென்றார்.

அவர்கள், விதிமுறை மீறல் என்று கருத மறுப்பு தெரிவித்தனர். எனவே விசாரணை அதிகாரியை நியமிக்க பரிந்துரை செய்தனர். இதற்கிடையில் பிசிசிஐ தொடர்பான வழக்கில் நீதிமன்ற ஆலோசகராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா கோபால் சுப்ரமணியனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ராகுல், பாண்டியாவிற்கு தண்டனை வழங்குவதை முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகக் குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்