ஆப்நகரம்

IND vs BAN: ’12 வருடங்களுக்கு பிறகு’…அணிக்கு திரும்பிய இந்திய வீரர்: ஒரு பக்கம் இன்பம், மறுபக்கம் துன்பம்!

12 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியில் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 22 Dec 2022, 9:10 am
இந்திய அணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் தனது 19 வயதில், 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இந்திய அணிக்கு அறிமுகமானார். ஒரு போட்டியில் மட்டுமே களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. மொத்தம் 26 ஓவர்கள் அதாவது 156 பந்துகள் வீசி விக்கெட்கள் எதுவும் வீழ்த்தவில்லை. அதன்பிறகு, இவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.
Samayam Tamil ஜெய்தேவ் உனாத்கட்


ஒருநாள் அணியிலும்:

அதேபோல் இதுவரை 7 ஒருநாள், 10 டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அதுவும் 2013 முதல் 2018ஆம் ஆண்டுவரை மட்டுமே. ஐபிஎல் தொடரில்தான் உனாத்கட் அடிக்கடி பார்க்க முடிகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், கடுமையாகப் பயிற்சி செய்து கடந்த 2020ஆம் ஆண்டுமுதல் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். குறிப்பாக, 2020-ல் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய பௌலராக திகழ்ந்தார். அதே பார்முடன் ஐபிஎல் தொடருக்குத் திரும்பிய உதான்கட், முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்குப் பந்துவீசினார்.

உனாத்கட் போராட்டம்:

இதனால், இவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதினர். ஆனால், அப்படி நடக்கவில்லை. இருப்பினும், மனந்தளராமல் உனாத்கட் தொடர்ந்து அபாரமாக பந்துவீசி வந்தார். குறிப்பாக, ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களிலும், ஐபிஎல் தொடர்களிலும் அபாரமாக பந்துவீசினார்.

2010-க்கு பிறகு:

இதனால், சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேசம் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி உனாத்கட் அபாரமாக பந்துவீசி அசத்தினார். இதனால், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியிருக்கும் முகமது ஷமிக்கு மாற்றாக ஜெய்தேவ் உனாத்கட் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம், நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய பௌலர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.

இரண்டாவது டெஸ்ட்:

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களுடன் விளையாடியதால் முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன்தான் இந்தியா களமிறங்கியது. இந்நிலையில், தற்போது துவங்கியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, உனாத்கட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒருபக்கம் இன்பம், மறுபக்கம் துன்பம்:

உனாத்கட் 12 வருடங்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பினாலும், முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகன் விருது வென்ற குல்தீப் யாதவை நீக்கியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்