ஆப்நகரம்

‘கிரிக்கெட்டின் கடவுள்’ சச்சின் டெண்டுல்கர் ஓய்வுபெற்ற தினம் இன்று!

கிரிக்கெட்டின் கடவுள், லிட்டில் மாஸ்டர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 2013ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்றார்.

Samayam Tamil 16 Nov 2020, 10:37 am
1973ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி பிறந்த சச்சின் டெண்டுல்கர், தனது கடின உழைப்பின் மூலம் கிரிக்கெட் உலகின் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்து, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை கடந்து வரலாற்றுச் சாதனை படைத்தார். ஐசிசியால் உருவாக்கப்பட்ட நிரந்தர டெஸ்ட் லெவன் அணியில் இடம்பிடித்த ஒரே இந்தியராகவும் உள்ளார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் கிட்டதட்ட 30,000 ரன்களை கடந்துள்ள இவர், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற தனது 200 டெஸ்ட் போட்டியின் முடிவில், கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்தார்.
Samayam Tamil Sachin


மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதம், 68 அரை சதங்களுடன் 15,921 ரன்களை குவித்து, ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 248* ரன்கள் சேர்த்துள்ளார். 463 ஒருநாள் போட்டிகளில் 96 அரை சதம், 49 சதங்கள் விளாசி 18,426 ரன்கள் எடுத்து, ஒரு போட்டியில் அதிகபட்சமாக 200* ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் உலகிற்குப் பேரும் புகழும் சேர்ந்த சச்சின் டெண்டுல்கருக்கு 1994ஆம் ஆண்டில் அர்ஜூனா விருதும், 1997ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டன. 1999, 2008ஆம் ஆண்டுகளில் பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டது.

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான் கில்லியா?

பாரத் ரத்னா (2013) விருது வென்ற முதல் விளையாட்டு வீரராக சச்சின் திகழ்கிறார். கிரிக்கெட் உலகிற்கு தனது சேவையை முடித்துக் கொண்ட சச்சின் டெண்டுல்கர், தற்போது பொதுச் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

கிராமப்புறத்தில் இருக்கும் குழந்தைகளைத் தத்தெடுத்துப் படிக்க வைப்பது, ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி செய்வது போன்ற பல்வேறு சமூகப் பணிகளை செய்து, இந்தியர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்