ஆப்நகரம்

மொயின் அலி ISIS இயக்கத்தில் சேர்ந்திருப்பார்…வங்கதேச பெண் எழுத்தாளர் சர்ச்சை ட்வீட்!

மொயின் அலி தீவிரவாதியாக மாறியிருப்பார் என வங்கதேசப் பெண் எழுத்தாளர் டாஸ்லிம்மா நஷ்ரீன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Apr 2021, 9:07 pm
இங்கிலாந்து அணி ஆல்-ரவுண்டர் மொயின் அலி, ஐபிஎல் 14ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதற்காக, சக சிஎஸ்கே வீரர்களுடன் மும்பையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
Samayam Tamil மொயின் அலி


இந்நிலையில், இவர் குறித்து தற்போது ட்வீட் வெளியிட்டுள்ள வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், முஸ்லீம் மத எதிர்ப்பாளருமான டாஸ்லிமா நஷ்ரீன், “மொயின் அலி கிரிக்கெட் விளையாடாமல் இருந்திருந்தால் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்திருப்பார்” என ட்வீட் வெளியிட்டார். இந்த ட்வீட் வைரலான நிலையில் பலர் கண்டனங்களைக் குவித்து வருகிறார்கள்.

குறிப்பாக, இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர், சாம் பில்லிங்ஸ் போன்றவர்கள் மொயின் அலி குறித்த ட்வீட்டை டாஸ்லிமா நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். ஆர்ச்சர் வெளியிட்ட பதில் ட்வீட்டில், “நீங்கள் நலமாகத்தான் இருக்கிறீர்களா? மனநலம் சரியாகத்தான் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் ஒரு ட்வீட் வெளியிட்ட டாஸ்லிமா “நான் பதிவிட்ட ட்வீட் ஹேட்டர்ஸ்களுக்கு வெறுப்பாக இருக்கும். முஸ்லிம் மதத்திற்கு ஆதரவாக இருப்பவர்கள் என்னை அவமானப்படுத்த முயல்கிறார்கள். நான் இஸ்லாமிய வெறித்தனத்தை எதிர்க்கிறேன். மனிதக் குலத்தின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று, பெண்கள் சார்பு இடதுசாரிகள், பெண்கள் விரோத இஸ்லாமியவாதிகளை ஆதரிப்பதுதான்” எனப் பதிவிட்டார்.

விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்க்காமல், டாஸ்லிமா எதற்காக மொயின் அலியை மதத்துடன் தொடர்புபடுத்தி அருவருக்கத்தக்க வகையில் ட்வீட் வெளியிட வேண்டும், அவர் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு ட்வீட் வெளியிட்டுள்ளார் எனப் பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது, டாஸ்லிமா ட்விட்டர் கணக்கைப் பலர் ரிப்போர்ட் செய்து வருவதால், விரைவில் அந்த கணக்கு முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்