ஒரு தரமே இல்லாமல், பொறுப்பே இல்லாமல் ஆடிக் கொண்டிருக்கிறது இந்திய அணி. வெட்கமாக இருக்கிறது. நமக்கெல்லாம் ஐபிஎல் மட்டும் ஆடினால். முதலில் இந்திய அணியை திரும்பப் பெறுங்கள் என்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கோபமாக கூறியுள்ளார்.
சரி அடுத்து வரும் போட்டிகளிலாவது அனல் கக்கும் என்று பார்த்தால் நேற்று நியூசிலாந்திடம் ரொம்ப மோசமாக ஆடி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்தியா வெறும் 110 ரன்களை மட்டுமே எடுத்துக் கவிழ்ந்ததைப் பார்த்து ரசிகர்கள் அப்செட்டாகி விட்டனர். இந்தியா வெல்வது கடினம் என்ற முடிவுக்கு வந்த பலர் சானலை மாற்றி சன் டிவியில் படையப்பா படம் பார்க்கப் போய் விட்டனர்.
நியூசிலாந்து தனது சேஸிங்கை மிக அழகாக மேற்கொண்டு 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் இந்தத் தோல்வியை ரசிகர்களால் ஏற்க முடியவில்லை. பலரும் கோலி டீமை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சரத்குமாரும் இந்திய அணியை கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், தரமே இல்லை, வெட்கித் தலைகுணியும் வகையில் பொறுப்பற்ற ஆட்டத்தை நமது அணி கொடுத்துள்ளது. அடுத்து நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளிடமும் தோற்று மானம் போவதற்கு முன்பு அவர்களைத் திரும்பப் பெற்று விடுவது நல்லது. மற்ற அணிகள் எல்லாம் தங்களது நாட்டுக்காக ஆடுகின்றன. டி20 போட்டிகள் குறித்த நல்ல ஞானத்துடன் விளையாடுகின்றனர். நமது வீரர்களுக்கு ஐபிஎல்தான் லாயக்கு. அதையே அவர்கள் ஆடட்டும்" என்று கோபமாக கூறியுள்ளார் சரத்குமார்.
இந்திய அணியில் இத்தனைக்கும் ஏகப்பட்ட டி20 ஸ்பெஸலிஸ்டுகள் உள்ளனர். போதாக்குறைக்கு கூல் கேப்டன் என்று பெயர் பெற்றவரும், இந்தியாவுக்காக அனைத்து உலக கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தவருமான தோனி மென்டார் ஆக உள்ளார். அப்படி இருந்தும் இந்தியாவின் பேட்டிங் நேற்று மிக மோசமாக இருந்தது. பாண்ட்யா மட்டும் 23 ரன்கள் எடுக்காமல் போயிருந்தால் 100 ரன்களைக் கூட இந்தியா தாண்டியிருக்காது போல.. அப்படி மோசமாக ஆடினர்.
டிவிட்டரில் இந்திய அணியின் தோல்விதான் இன்னும் டிரெண்டிங்கில் உள்ளது. பலரும் இந்திய அணியின் ஆட்டத்தையும், அவர்கள் விளையாடிய விதத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்களிடம் அதிகமாக வறுபடுவது கோச் ரவி சாஸ்திரிதான். அடுத்தடுத்து இந்தியா எப்படி ஆடப் போகிறதோ.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.