ஆப்நகரம்

Tokyo Olympic: பதக்கம் வென்றார் சிந்து...வரலாற்றுச் சாதனை படைத்து அசத்தல்!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து பத்தகம் வென்று அசத்தியுள்ளார்.

Samayam Tamil 1 Aug 2021, 5:56 pm
32ஆவது ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஒரேயொரு பதக்கம் மட்டுமே வென்றிருந்தது. பளு தூக்கும் போட்டியில் மீரா பாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்திருந்தார்.
Samayam Tamil பி.வி.சிந்து


குத்துச் சண்டை போட்டியில் லாவ்லினா இந்தியாவுக்குப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அதேபோல், வட்டு எறிதல் பிரிவில் கமல்ப்ரீத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்நிலையில் பேட்மிண்டனில் பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த நிலையில், அதில் தோற்று தற்போது வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கலந்து கொண்டார்.

விறுவிறுப்பான போட்டி:

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் சீனாவின் ஹி பிங்க் ஜயோ ஆகியோர் மோதினர். முதல் செட்டில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து, ஒரு கட்டத்தில் 16-9 என்ற கணக்கில் அபார முன்னிலை பெற்றார். அதனைத் தொடர்ந்து சீன வீரங்கனை முன்னிலை பெற கடும் முயற்சி செய்து சில புள்ளிகளை சேர்த்தார். இருப்பினும், இறுதியில் சிந்து 21-13 என்ற கணக்கில் அபார வெற்றிபெற்றார்.

இதனால், அடுத்த செட் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதிலும் சிந்து துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த துவங்கினார். சீன வீரங்கனையும் கடுமையாக போராடியதால் ஆட்டம் 8-6 என பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. அடுத்து 17-14 என போட்டி நகர்ந்ததால், போட்டி பரபரப்பின் உச்சத்திற்கே சென்றது. இறுதியில் சிந்து 21- 15என்ற கணக்கில் அபார வெற்றிபெற்று, வெண்கலம் வென்று அசத்தினார்.

சிந்துவுக்கு இது இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும். இதற்குமுன் 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதன்மூலம், இந்தியாவுக்காக தனி நபர் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று கொடுத்த முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்