ஆப்நகரம்

''பதக்கத்தை என் பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறேன்''.. துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் பேட்டி

பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த 'இளவேனில் வளரிவான்' என்ற வீரமங்கை துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

Samayam Tamil 29 Aug 2019, 6:22 pm
பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை ''இளவேனில் வளரிவான்'' தங்கப் பதக்கத்தை உறுதுணையாக இருந்த தனது பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கூறியது நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil elavenil


பிரேசில் நாட்டில் ''ரியோ டி ஜெனிரோ'' நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர் மற்றும் வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்று உள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வளரிவான் கலந்துக் கொண்டு, 251.7 புள்ளிகளுடன் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

நாடு முழுவதும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது இளவேனில் அளித்துள்ள இரண்டு நிமிட பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அளித்திருந்த பேட்டியில், ''இந்த வெற்றியை அடுத்து சீனாவில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நடக்கவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராவதுதான் எனது அடுத்த கட்ட இலக்கு.

என்னை போல் விளையாட்டு துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, எந்த வித பின்புலமும் இல்லாமல் சாதிக்க நினைக்கும்பொழுது நிறைய ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். சோதனைகளை கண்டு துவண்டு போகாமல் அதை எதிர்த்து லட்சியத்திற்காக போராடுவதுதான் முக்கியம். மீண்டும் மீண்டும் முயற்சித்தால் இலக்கை நிச்சயம் அடையலாம். சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த நாட்களில் எத்தனையோ சவால்களை சந்தித்துள்ளேன். அத்தனை சவால்களை கடந்து அனைத்து தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே முதல் மூன்று தர வரிசையில் இடம்பெற முடியும். ஒவ்வொரு தொடரிலும் கற்றுக் கொண்டதை முழுமையாக வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி அடைய முடியும். இதுவரை எனக்கு உறுதுணையாக இருந்த எனது பெற்றோருக்கு பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன்'' என்றுகூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்