ஆப்நகரம்

என்னை பற்றி மோசமான விஷயங்கள் பேசுகிறார்கள்: சுஷாந்த் சிங்கின் காதலி ரியா முதல் முறையாக பேசியிருக்கும் வீடியோ

மறைந்த சுஷாந்தின் காதலி ரியா தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி முதல் முறையாக பேசி இருக்கிறார்.

Samayam Tamil 1 Aug 2020, 8:41 am
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருந்தவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். அவர் கடந்த ஜூன் 14ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் மன அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்ட நிலையில் மும்பை போலீசார் பல்வேறு பிரபலங்கள் இடமும் இது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil Rhea Chakraborty


இந்நிலையில் சமீபத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் அப்பா அளித்திருந்த போலீஸ் புகாரில் சுஷாந்தின் காதலி பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். ஸ்ரீசாந்தின் வங்கி கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் அவர் டிரான்ஸ்பர் செய்துள்ளார், சுஷாந்த் இறப்பதற்கு முன்பு பல்வேறு விஷயங்களை ரியா செய்திருக்கிறார், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதே அவர் தான் என சுஷாந்தின் தந்தை புகார் அளித்திருந்தார்.

சுஷாந்த் இறப்பு பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஒரு தரப்பினர் கேட்டு வரும் நிலையில், சுஷாந்தின் குடும்பம் அளித்த இந்த புகார் சினிமா துறையில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது நாள் வரை அமைதியாக இருந்த ரியா சக்ரபர்த்தி ஒரு வீடியோவை தற்போது கண்ணீருடன் வெளியிட்டு இருக்கிறார். அதில் நீதி துறை மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் தனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, "எனக்கு கடவுள் மற்றும் நீதித்துறை மீது மிக அதிக அளவில் நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நீதி வழங்கப்படும் என நம்புகிறேன். மீடியாவில் என்னைப் பற்றி மிகவும் மோசமான பல விஷயங்களை சொல்கிறார்கள். ஆனால் நான் அது பற்றி எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் அது பற்றி பேச வேண்டாம் என வழக்கறிஞர்கள் எனக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். சத்தியமேவ ஜெயதே. உண்மை வெல்லும்" என ரியா கூறியுள்ளார்.


சுஷாந்த் இறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில் ஜூலை 25ஆம் தேதி தான் அவரது அப்பா போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதுவரை அவரது குடும்பமும் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது. அவர் பீகாரில் உள்ள பாட்னாவில் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து ரியா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் பாட்னாவில் பதிவாகியிருக்கும் வழக்கு விசாரணையை மும்பைக்கு மாற்ற வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இது பற்றி கருத்து கூறிய சுஷாந்தின் அப்பாவின் வழக்கறிஞர் மும்பை போலீஸ் நடத்தும் விசாரணையில் சுஷாந்த் குடும்பத்திற்கு திருப்தி இல்லை எனவும் அதனால் தான் பாட்னாவில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். 2019ல் சுஷாந்த்துடன் பழக துவங்கிய ரியா அவர் மூலமாக தன்னுடைய கெரியரை வளர்த்துக் கொள்ளலாம் என பல விஷயங்களை செய்து இருக்கிறார் என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் சுஷாந்தின் அப்பா பதிவு செய்த புகாரின் எஃப் ஐ ஆர் அடிப்படையில் அமலாக்க இயக்குனரகம் பண மோசடி வழக்கு பதிவு செய்து இருக்கிறது. Prevention of Money Laundering Act (PMLA)ன் படி அவர்கள் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் ரியா சக்ரபர்த்தி, அவரது குடும்பத்தினர் மற்றும் மேலும் 6 பேர் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த அவர்கள் விரைவில் நேரில் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்