ஆப்நகரம்

அந்த வலி எனக்கும் தெரியும்: இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவி அளித்த ஷாருக் கான்

தாய் இறந்தது தெரியாமல் அவரை குழந்தை எழுப்ப முயற்சித்த வீடியோ வைரலான நிலையில், அந்த சிறுவனுக்கு ஷாருக் கான் உதவி செய்துள்ளார்.

Samayam Tamil 2 Jun 2020, 2:11 pm
ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது. பீகாரின் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் தனது தாய் இறந்தது தெரியாமல் ஒரு குழந்தை அவரை எழுப்ப முயற்சித்து கொண்டிருக்கும் வீடியோ தான் அது.
Samayam Tamil Shahrukh Khan helps child whose distressing video gone viral


அந்த வீடியோ பார்த்தவர்கள் அனைவரையும் சோகமடைய வைத்தது. கண்களில் நிச்சயம் கண்ணீர் வந்திருக்கும். புலம்பெயர் தொழிலாளர்களின் தற்போதைய நிலைமையை இந்த வீடியோ காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது அந்த குழந்தைக்கு உதவ நடிகர் ஷாருக் கான் முன்வந்துள்ளார். அவர் நடத்திவரும் Meer Foundation மூலமாக அந்த குழந்தைக்கு உதவியுள்ளார் அவர்.

"அந்த சிறுவன் தற்போது அவரது தாத்தாவின் பொறுப்பில் இருப்பதாகவும், அவருக்கு உதவி வழங்குகிறோம்" நேற்று Meer Foundation அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டு இருந்தனர். மேலும் அந்த குழந்தையை கண்டறிய உதவிய அனைவருக்கும் நன்றி கூறி இருந்தனர்.


அந்த பதிவை ரீட்விட் செய்து இருந்த ஷாருக் கான் உருக்கமாக பேசி இருந்தார். "அனைவருக்கும் நன்றி, அந்த சிறுவனை தொடர்பு கொண்டதற்காக. அவனது வாழ்க்கையில் இந்த துரதிஷ்டவசமான இழப்பை தாங்கிக்கொள்ள வலிமை கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன். அந்த உணர்வு எப்படி இருக்கும் என எனக்கு தெரியும். எங்கள் அன்பு மற்றும் ஆதரவு எப்போதும் உனக்கு உண்டு" என ஷாருக் கான் கூறியுள்ளார்.

"I know how it feels..." என ஷாருக் கான் குறிப்பிட்டு இருப்பது அவரது சொந்த வாழ்க்கையில் நடைபெற்றது பற்றித்தான். ஷாருக் கான் 15 வயதில் இருக்கும் போது அவரது அப்பா இறந்துவிட்டார். அதன் பின் அவருக்கு 26 வயது ஆகும் போது அம்மாவும் காலமானார்.

இது பற்றி சில வருடங்கள் முன்பு ஒரு பேட்டியில் ஷாருக் பேசி இருப்பார். "என வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் என் பெற்றோர்களை இழந்தது தான். அப்பா, அம்மா இருவரும் இன்றி காலியான வீட்டில் நானும் என் சகோதரியும் இருப்பது மிகவும் வலி நிறைந்த உணர்வு. தனிமை, வலி, சோகம் என எனது முழு வாழ்க்கையும் மூழ்கிவிடும் என்ற நிலை இருந்தபோது, அதில் இருந்து மீண்டு வந்து 'நடிப்பு' என் வாழ்க்கையை முழுமையாக்கும்படி செய்தேன்" என ஷாருக் அந்த பேட்டியில் உருக்கமாக பேசினார்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா பிரச்சனை காரணமாக ஏழை மக்கள் தத்தளித்து வரும் நிலையில், அவர்களுக்கு உதவும் விதத்தில் ஷாருக் கான் பல்வேறு நிதி உதவிகளை வழங்கி உள்ளார்.

மேலும் அவருக்கு சொந்தமான ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மீர் பவுண்டேஷன் உடன் இணைந்து ஆயிரம் PPE கிட்களை மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவின் அரசுகளுக்கு வழங்கியுள்ளார்.

ஷாருக் கடைசியாக ஜீரோ என்ற படத்தில் நடித்து இருந்தார். அதில் உயரம் குறைவான நபராக வித்யாசமாக நடித்து இருந்தார் அவர். ஆனால் அந்த படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. 2018 டிசம்பரில் இந்த படம் வெளிவந்த நிலையில் அதனை தொடர்ந்து வேறு எந்த படத்திலும் ஷாருக் நடிக்கவில்லை. அவர் தமிழ் இயக்குனர் அட்லீயின் அடுத்த படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்தாலும், அந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வரவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்