நடிகர் சங்கத் தேர்தலை தொடர்ந்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலும் தமிழ்த் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் தனியார் திரையரங்கில் நடைபெற்ற இயக்குநர்கள் சங்கத்தின் 99ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா அனைத்து உறுப்பினர்களாலும் ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சங்கத்தின் மற்ற பதவிகளுக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க ஜூலை 14ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜூலை 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
தேர்தலில் போட்டியின்றி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கபட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் பாரதிராஜா.
பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான எதிர்ப்பும் சங்கத்துக்குள் எழுந்தன. இயக்குநர் கரு பழனியப்பன், எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்டோர் இதை விமர்சித்திருந்தனர்.இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர்கள் சங்க பொதுக்குழுவுக்குப் பெரும்பாலும் வராதவர் பாரதிராஜா, அவர் ஜனநயக முறைப்படி ஜெயித்து வரட்டும் எனக் கூறியிருந்தார்.
ராஜினாமா செய்துவிட்டு பாரதிராஜா தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் ஒதுங்கியிருக்கப் போவதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.பாரதிராஜா தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருப்பதால் வீணான சர்ச்சைகளை தவிர்க்க, தேர்தலில் ஒதுங்கியிருப்பதாக தெரிகிறது. ஆனால் பாரதிராஜாவின் முடிவுக்கு பின்னால் சுரேஷ் காமாட்சி இருப்பதாக ஆர் கே செல்வமணி விமர்சிக்க, சுரேஷ் காமாட்சிஆர் கே செல்வமணியை கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் இயகுநர் சங்கத் தேர்தல் அடுத்த கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இயக்குநர் சங்கத்தில் பாரதிராஜாவுக்கு ஆதரவாக ஒரு அணியும் எதிராக ஒரு அணியும் இப்போது உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கான போட்டியில் இயக்குநர்கள் பி.வாசு, அமீர், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்துள்ளனர். முன்னனி இயக்குநர்கள் போட்டியிடுவதால் இத்தேர்தல் வெகு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.