ஆப்நகரம்

மாநாடு படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம்: கருணாகரனுக்கு காலில் அறுவை சிகிச்சை

கருணாகரனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Aug 2020, 8:29 am
சுந்தர் சி. இயக்கிய கலகலப்பு படம் மூலம் நடிகரானவர் கருணாகரன். பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, லிங்கா, இன்று நேற்று நாளை, கெத்து, இறைவி, இரு முகன், தொடரி, விவேகம், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Samayam Tamil karunakaran


8 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் கருணாகரன் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். லாக்டவுனுக்கு முன்பு அவர் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்பொழுது அவருக்கு காலில் அடிபட்டது.

இந்நிலையில் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கருணாகரன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. கருணாகரனுக்கு பீட்சா, சூது கவ்வும் ஆகிய படங்களில் நடித்தபோதே காலில் அடிபட்டிருக்கிறது. அப்பொழுது அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு மாநாடு படப்பிடிப்பின்போது அடிபட்டதில் இருந்து வலி அதிகமாக இருந்திருக்கிறது.

கொரோனா லாக்டவுன் பிரச்சனையால் ஸ்கேன் சென்டர்கள் திறக்கவில்லையாம். ஸ்கேன் சென்டர் திறந்த பிறகு ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். அதில் ஏசிஎல் எனப்படும் மூட்டு கிழிந்திருந்தது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்தே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.

இரண்டு வாரங்களில் அவர் குணமாகிவிடுவாராம். கருணாகரன் மருத்துவமனையில் படுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். லாக்டவுனுக்கு முன்பு மாநாடு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

கொரோனா வைரஸ் பிரச்சனை தீர்ந்த பிறகு மாநாடு படப்பிடிப்பை மீண்டும் துவங்க முடிவு செய்துள்ளனர். படப்பிடிப்பு இல்லாததால் வீட்டில் சும்மா இருக்கும் சிம்பு ஒர்க்அவுட் செய்வது, சமையல் செய்வது என்று பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் இருக்கும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்காக இன்று மாலை அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே குஷ்புவுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவர் கண்ணில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

கண்ணில் ஆபரேஷன்: குஷ்பு வெளியிட்ட போட்டாவால் ரசிகர்கள் அதிர்ச்சி

குஷ்புவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செய்தி வெளியான வேகத்தில் கருணாகரனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது என்ன யாருக்காவது, ஏதாவது செய்து கொண்டே இருக்கிறதே என்று சினிமா ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்