ஆப்நகரம்

வீரமரணம் அடைந்த சிவசந்திரன் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கி, ஆறுதல் கூறிய ரோபோ சங்கர்!

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிவசந்திரனின் வீட்டிற்கு சென்ற ரோபோ சங்கர், ஆறுதல் கூறினார்.

Samayam Tamil 18 Feb 2019, 10:01 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு, அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Samayam Tamil Robo Shankar


உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து, ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலாப்பேரியைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சிவசந்திரன் இல்லத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் சென்றார்.

அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரோபோ சங்கர், நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டிற்கு வந்திருக்கிறேன். என் மனதில் இருந்தவற்றை மட்டும் பேசிவிட்டுச் செல்கிறேன்.

இன்றைக்கு நாம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க, இவர்களைப் போன்ற எல்லைச்சாமிகள் தான் காரணம். தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவர்களின் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை.

சிவசந்திரன் இழப்பால் அவரது குடும்பம் பெரிதும் தவித்து வருகிறது. என்னால் ஆன சிறு உதவியாக பணம் கொடுத்துள்ளேன். இறந்துபோன வீரர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம். தற்போது சுப்பிரமணியன் ஊருக்குச் செல்கிறேன் என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்