ஆப்நகரம்

Savitri Balasubrahmanyam எஸ்பிபி-யின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது!

மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மனைவிக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

Samayam Tamil 15 Aug 2020, 10:55 am
பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது பற்றி அறிந்து பலரும் அவருக்கு போன் செய்து நலம் விசாரித்தார்கள். அதனால் அவர் முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் தனக்கு மிக லேசான கொரோனா தொற்று மட்டுமே இருக்கிறது என்றும் இன்னும் இரண்டு தினங்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
Samayam Tamil S. P. Balasubrahmanyam


என்னை மருத்துவர்கள் வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டு இருக்கத் தான் அறிவுரை கூறினார்கள். நான் தான் ரிஸ்க் எடுக்க விரும்பாமல், மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். குடும்பத்தினர் அனைவரும் இருக்கும் போது தனிமையில் இருப்பது சாத்தியம் இல்லாததாக இருக்கும் என அவர் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அவர் மிகத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டுமென பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது எஸ் பி பாலசுப்ரமணியன் குடும்பத்தாருக்கும் கொரோனா சோதனை செய்யப் பட்டு இருக்கிறது. அதில் அவரது மனைவி சாவித்திரிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதில் இருந்த அவரும் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த செய்தியும் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை மோசமடைந்து இருக்கிறது என்கிற செய்தி நேற்று மாலை வந்ததில் இருந்து முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவர் மீண்டும் நலம் பெற வேண்டும் என்று பிராத்தித்து வருகிறார்கள். குறிப்பாக இளையராஜா மிக உருக்கமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் "பாலு சீக்கிரமா எழுந்து வா.. உனக்காக காத்திருக்கிறேன்" என உருக்கமாக பேசி இருந்தார்.

"நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை.சினிமாவோடு தொடங்கியதும் அல்ல. எங்கேயோ மேடை கச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி, அந்த இசை நமது வாழ்வாகவும், நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது. அந்த மேடை கச்சேரிகளிலே ஆரம்பித்த நமது நட்பும் இசையும்.. இசையும் ஸ்வரமும் எப்படி ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அதே போல உனது நட்பும், என்னுடைய நட்பும்" என்று இளையராஜா கூறி இருந்தார்.

மேலும் நேற்று இரவு பாலசுப்ரமணியம் உடல்நிலை பற்றி பல்வேறு வதந்திகளும் பரவ துவங்கின. அதை பார்த்து அதிர்ச்சியான அவரது மகன் எஸ்.பி.பி.சரண் ட்விட்டரில் விளக்கம் அளித்து இருந்தார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு பதிவிட்டு இருந்த ட்விட்டில் 'தவறான செய்திகளை பரப்பாதீர்கள்' என கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

முன்னணி நடிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலரும் ட்விட்டரில் SPB நலம் பெற வேண்டி ட்விட் செய்து இருக்கிறார்கள்.

இசை ரசிகர்கள் அனைவரும் எஸ்.பி.பி.க்காக பிரார்த்தனை செய்யுங்கள்: ஏ.ஆர். ரஹ்மான், தனுஷ்

அடுத்த செய்தி

டிரெண்டிங்