ஆப்நகரம்

அஜித் உதவி செய்ததாக சொல்வதெல்லாம் பொய்.. அங்காடி தெரு சிந்து

தான் கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அஜித் மேனஜரிடம் 10 முறை உதவி கேட்டும் அவர் செய்யவில்லை என அங்காடி தெரு சிந்து கூறி உள்ளார்.

Samayam Tamil 24 Sep 2020, 5:59 pm
அங்காடி தெரு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் சிந்து. அவர் தற்போது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக வீட்டில் இருக்கிறார் என்றும், புற்றுநோய் தற்போது முதுகெலும்பு வரை பரவிவிட்டது என்றும், கீமோதெரபி சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது.
Samayam Tamil Ajith, Angadi Theru Sindhu


மேலும் அவர் சிகிச்சைக்கு பண உதவி கேட்டு உருக்கமாக பேசி இருந்த வீடியோ ஒன்றும் சினிமா துறையினரை கலக்கமடைய வைத்தது. சிந்து சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் தனக்கு யாருமே உதவி செய்யவில்லை என கூறி இருக்கிறார். நான் நன்றாக இருந்த போது என்னிடம் உதவி வாங்கியவர்கள் கூட தற்போது எனக்கு கேன்சர் என தெரிந்ததும் காணாமல் போய்விட்டார்கள் என தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே எனக்கு கேன்சர் இருக்கிறது என்பது தெரியும். கொரோனா நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. அதன்பிறகு கொரோனாவால் வறுமையில் இருந்தவர்களுக்கு நான் நகைகளை அடகு வைத்து கூட உதவி செய்து இருக்கிறேன்.

ஆரம்பத்தில் நான் சினிமாவை தவிர்த்து பல சீரியல்களிலும் நான் ஹீரோயினாக நடித்து இருக்கிறேன். சம்பாதித்ததை வைத்து நான் படம் எடுத்தேன். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே விட்டுவிட்டேன். 2003ல் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன். உடன் இருந்த பார்ட்னர்கள் அனைவரும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். அதனால் 1 கோடியே 80 லட்சம் ருபாய் அளவுக்கு கடன் ஏற்பட்டது. அதை ஒரே வருடத்தில் அடைந்து விட்டேன்.

நான் சினிமாவில் 150 படங்களில் நடித்து இருக்கிறேன். முதலில் நான் கேன்சர் சிகிச்சைக்காக ஆர்கே சுரேஷிடம் தான் உதவி கேட்டேன் அவர் செய்யவில்லை. அதன் பின் அஜித் சாரின் மேனேஜரை பத்து முறை அழைத்தேன். ஆனால் அவர் ‘அஜித்தை தொடர்பு கொள்ளவே முடியவில்லை, சாரி’ என கூறிவிட்டார். அஜித் அவ்ளோ கொடுத்தார் இவ்ளோ கொடுத்தார் என சொல்வது எல்லாமே பொய். தீப்பெட்டி கணேசன் கஷ்டத்தில் இருந்தபோது அவருக்கு முதல் ஆளாக சென்று உதவி செய்தது நான் தான் என அங்காடி தெரு சிந்து கூறி இருக்கிறார்.

மேலும் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி 20 ஆயிரம் ருபாய் தனக்கு கொடுத்தார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மொத்தம் 50 ஆயிரம் ருபாய் கொடுத்தார். பல ஆர்ட்டிஸ்டுகளுடன் நான் நெருக்கமாக இருந்தேன் ஆனால் அவர்கள் யாரும் உதவி செய்யவே இல்லை.

காமெடி நடிகர் சூரி உடன் நன்கு தெரிந்தவர் தான். மூன்று படங்களில் நான் அவருக்கு ஜோடியாக நடித்து இருக்கிறேன். அவருக்கு மெசேஜ் அனுப்பினேன், ஆனால் அவர் ஒரு ரிப்ளை கூட செய்யவில்லை. போன் செய்தால் அவரது உதவியாளர் எடுத்து சார் பிஸியாக இருக்கிறார் என சொல்வார்கள். மேலும் பலர் என்னை அதிகம் கஷ்டமும் படுத்தி இருக்கிறார்கள்.

எனக்கு நண்பர்கள் அதிகம். என்னை சுற்றி அதிக அளவு நண்பர்கள் இருந்தார்கள். நான் என்ன செய்வேன் என என்னை சுற்றி எப்போதும் அதிகம் பேர் காத்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் அனைவரும் எனக்கு கேன்சர் என தெரிந்ததும் காணாமல் போய்விட்டார்கள் என அங்காடி தெரு சிந்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்