ஆப்நகரம்

அப்பாவை பார்த்தேன், நல்லா இருக்கார், பாட்டு கேட்கிறார்: எஸ்.பி.பி. சரண்

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சரண் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Aug 2020, 7:10 pm
கொரோனா வைரஸ் பாதிப்பால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் இருக்கிறார். கடந்த 12ம் தேதி இரவில் இருந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
Samayam Tamil sp balasubrahmanyam


எஸ்.பி. பாலசுப்பிரமணியம் எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும் இசை ரசிகர்களுக்காக அவரின் மகன் சரண் தினமும் அப்டேட் கொடுத்து வீடியோ வெளியிட்டு வருகிறார். இன்றைய அப்டேட் கொடுத்து சரண் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் சரண் கூறியிருப்பதாவது,
View this post on Instagram A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on Aug 26, 2020 at 5:48am PDT
இன்று மதியம் மருத்துவமனைக்கு சென்று அப்பாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவை சந்தித்து பேசினேன். நேற்று முன்தினம் நான் அவரை சந்தித்தபோது இருந்ததை விட இன்று அப்பாவின் நிலைமை எவ்வளவோ தேறியுள்ளது. அவரின் நுரையீரலில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மயக்க மருந்து இல்லாமல் அவர் சவுகரியமாக இருக்கிறார். அப்பா குணமடைவதில் முதல் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மருத்துவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

நேற்று முன்தினம் பார்த்ததை விட இன்று அப்பா நன்றாக கண் திறந்து பார்த்தார். என்னிடம் ஏதோ சொல்ல விரும்பி அதை எழுத முயற்சி செய்தார். ஆனால் அவரால் பேனாவை பிடித்து எழுத முடியவில்லை. இந்த வாரத்தில் அவர் எழுத்து மூலம் என்னுடன் பேசுவார் என்று நம்புகிறேன். அப்பாவுக்கு செய்தித்தாளை தினமும் வாசிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அப்பா பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பாட முயற்சி செய்கிறார். நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.

என் அப்பாவுக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அப்பாவின் நிலைமை குறித்து அறிந்து கொள்ள விரும்பும் ரசிகர்களுக்காக தான் இந்த அப்டேட்டை வெளியிடுகிறேன். என் அப்பாவுக்காக பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி என்றார்.

சரண் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அப்பாவின் நிலைமை அப்படியே தான் இருக்கிறது என்று கூறி வந்த சரண் தற்போது நல்லவிதமாக தெரிவித்துள்ளார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் வீடு திரும்பி மீண்டும் படங்களில் பாட வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்த எஸ்.பி.பி. மகன் ஏன் இங்கிலீசுலேயே பேசுறார், தமிழில் பேசுனா என்னவாம்?

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்காக தினமும் பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்