ஆப்நகரம்

அரண்மனை 3 கதையில் ஒரு ட்விஸ்ட்! பேயாக நடிப்பது இவர் தான்?

அரண்மனை 3 படத்தில் பேயாக ஆர்யா நடிக்க உள்ளார் என தகவல் பரவி வருகிறது.

Samayam Tamil 3 Sep 2020, 7:30 pm
நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடி நிறைந்த பல படங்களை எடுத்து இருப்பவர் சுந்தர்.சி. அதே நேரத்தில் ஹாரர் படங்களிலும் அவர் மிரட்டி வருகிறார். அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய படங்களில் அவர் பேய் பட ரசிகர்களை கவர்ந்துவிட்டார். முதல் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இதில் ஆர்யா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
Samayam Tamil Aranmanai 3


இந்நிலையில் தற்போது இந்த படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடிகைகளுக்கு தான் பேயாக அலைவது போல கதை இருக்கும். ஆனால் மூன்றாம் பாகத்தில் சற்று வித்தியாசமாக ஆர்யாவுக்கு பேய் கதாபாத்திரத்தை சுந்தர்.சி வழங்கி இருக்கிறார். அவர் தனது கெரியரில் முதல் முறையாக பேயாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரண்மனை படத்தில் ஹன்சிகா பேயாக ஆண்ட்ரியாவை பிடித்துக்கொள்வது போலவும், இரண்டாவது பாகத்தில் த்ரிஷாவை பிடித்துக்கொள்வது போலத்தான் கதை இருக்கும். இந்த முறை ஆர்யா அந்த ரோலில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் ராசி கண்ணா அளித்திருக்கும் பேட்டியில் தனக்கு ஹாரர் படங்களில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்றும், அது இவ்வளவு பிரபலமான அரண்மனை சீரிஸ் படத்தில் நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி என கூறி இருந்தார்.

வழக்கமாகவே சுந்தர் சி காமெடிக்கு அதிக முக்கியத்துவம் வழங்குபவர் என்பதால் இதிலும் காமெடி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். யோகி பாபு மற்றும் விவேக் ஆகியோர் அரண்மனை 3ல் நடிப்பதாக முன்பே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அரண்மனை மூன்றாம் பாகத்தின் ஷூட்டிங் குஜராத்திலுள்ள ராஜ்கோட்டில் ஒரு அரண்மனையில் நடைபெற்று வந்தது. மொத்த படக்குழுவினரும் அதில் கலந்து கொண்டார்கள். படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடந்து வந்த சூழ்நிலையில் தான் கொரோனா வைரஸ் மார்ச் மாதம் பரவத் துவங்கியது. அதற்குப் பிறகு அரசு நாடு முழுவதும் ஊரடங்கு போட்ட காரணத்தினால் ஷூட்டிங்கை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஆறு மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் விரைவில் அரண்மனை மூன்றாம் பாகத்தின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரண்மனை 3 அப்டேட் ஒருபுறம் இருக்க சுந்தர் சி ஒரு சூப்பர்ஹிட் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி இருக்கிறார் என்கிற தகவல் அதிகம் பரவி வருகிறது. மாயாபஜார் என்ற படத்தினை தான் தமிழில் தயாரிக்க உள்ளார் சுந்தர் சி. அதில் அவர் ஒரு ரோலில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதனை அவரது உதவியாளர் தான் இயக்க உள்ளார்.

மேலும் VZ துரை இயக்கத்தில் தலைநகரம் 2ம் பாகத்திற்காக மீண்டும் கூட்டணி சேர உள்ளார் என்கிற தகவலும் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருட்டு என்ற படத்தில் துரை உடன் சுந்தர்.சி பணியாற்றி இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்