ஆப்நகரம்

சினிமாவில் இருந்து ஒதுங்குகிறாரா பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணி? அவரே கூறிய விளக்கம்

பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணி சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக பரவிய செய்தி வதந்தி என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 20 May 2020, 7:14 pm
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான பாகுபலி படங்கள் இந்திய அளவில் ஹிட் ஆனது. இந்திய சினிமா வரலாற்றில் பல வசூல் சாதனைகளை இந்த இரண்டு படங்களும் படைத்தது. தற்போது வரை பல சாதனைகளை மற்ற பாலிவுட் படங்களால் கூட தொட முடியவில்லை.
Samayam Tamil Keeravani


இந்த படத்தில் ரசிகர்களை அதிகம் ஈர்த்த விஷயங்களில் கீரவாணியின் இசையும் ஒன்று. வரலாற்று கதைக்கு மிக பிரமாண்டமாக இசை அமைத்து இருப்பார் அவர். பாடல்களும் மிகப்பெரிய ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்திற்கு பிறகு தற்போது ராஜமௌலியின் அடுத்த படமான ஆர்ஆர்ஆர் படத்திற்கு அவர் இசையமைத்து வருகிறார். அதனால் இந்த படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துளளது. இந்நிலையில் RRR படம் தான் கீரவாணியின் கடைசி படம், அவர் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துவிட்டார் என செய்திகள் பரவி வந்தது.

கடந்த சில நாட்களாக இந்த செய்தி அதிகம் வைரலான நிலையில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் இது பற்றி கீரவாணி விளக்கம் அளித்துள்ளார்.

"தற்போது கொரோனா லாக்டவுனில் நான் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருக்கிறேன். நகரத்தின் பிரச்சனைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். ஆனால் சினிமாவை விட்டு விலகும் எண்ணம் எல்லாம் எதுவும் இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் நீண்ட காலத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்ற ஆசை இருப்பதாக அவர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

RRR படத்திற்கு தமிழில் இரத்தம், ரணம், ரௌத்திரம் என பெயர் வைத்துள்ளனர். தமிழில் மரகதமணி என்கிற பெயரில் இசையமைத்து வருகிறார் கீரவாணி என்பது குறிப்பிடத்தக்கது.

RRR படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திற்கு முன்னர் நடப்பது போன்ற கதை இது. அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக கொண்டுஎடுக்கப்படுகிறது. மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.

ஷூட்டிங் கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ராம் சரண் பிறந்தநாள் அன்று அவரது கதாபாத்திரத்தில் டீஸர் வெளியிடப்பட்டது. அதில் இருந்த வசனம் மற்றும் இசை ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது.

இன்று ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாள் என்பதால் இன்னொரு டீஸர் வெளிவரும் என எதிர்பார்த்தனர். ஆனால் லாக்டவுன் காரணமாக அது வெளியிட வாய்ப்பு இல்லை என படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.

இசையமைப்பாளர் கீரவாணி இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அவர் இளையராஜா பாடல்கள் பற்றி கீரவாணி வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலானது உங்களுக்கு நினைவிருக்கும்.

ஸ்வீட் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என கீரவாணியிடம் யாரோ கூறினார்களாம். அதனால் ஸ்வீட்டுக்கு நோ சொல்லிவிட்டாராம் அவர். அதற்க்கு பதிலாக இளையராஜா பாடல்களை கேட்கிறாராம். அதை கேட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிவிடும் என கூறியிருந்தார் கீரவாணி.

இளையராஜா பாடல்கள் மிக இனிமையாக இருப்பதை அவர் ஸ்வீட் உடன் ஒப்பிட்டது பலரையும் ஆச்சர்ப்படுத்தியது .

அடுத்த செய்தி

டிரெண்டிங்