ஆப்நகரம்

சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தை வெளியிட தடை: ரசிகர்கள் அதிர்ச்சி!

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 23 Dec 2021, 9:57 pm
'நேற்று இன்று நாளை' திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'அயலான்'. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்தப்படத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
Samayam Tamil Ayalaan
Ayalaan


'அயலான்' படத்தை 24 ஏ. எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் டேக் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் என்பவர் 'அயலான்' படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தங்கள் நிறுவனத்திடம் இருந்து 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் 5 கோடி கடனாக பெற்றிருந்த நிலையில் தற்போது அது வட்டியோடு சேர்ந்து 6 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தை திணறடித்த கமல் ரீல் மகளின் போட்டோ ஷுட்: வைரலாகும் புகைப்படம்!
தற்போது 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து அயலான் படத்தை தயாரிக்கும் நிலையில், தங்களுக்கு தர வேண்டிய பணத்தை செலுத்தாமல் படத்தை வெளியிடவோ, விநியோகம் செய்யவோ தடை விதிக்க கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அயலான் படத்தை வெளியிட 2022, ஜனவரி 3 ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு விசாரணை ஜனவரி 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்