ஆப்நகரம்

வந்துடுடா பாலு.. வீடியோவில் கண்ணீர் விட்ட பாரதிராஜா

'நான் வணங்குகின்ற பஞ்ச பூதங்கள் அத்தனையும் உண்மை என்றால் நீ மறுபடியும் வருகிறாய்' என கூறி பாரதிராஜா எஸ்பிபி திரும்ப வரும்படி கேட்டிருக்கிறார்.

Samayam Tamil 19 Aug 2020, 10:29 am
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது பிரபலங்கள் பலரும் அவரை விரைவில் இதில் இருந்து மீண்டு வர வேண்டும் என பிராத்தித்து வருகிறார்கள்.
Samayam Tamil Bharathiraja


இயக்குனர் பாரதிராஜா சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் "என் நண்பன் பாலு, தன்னம்பிக்கையானவன்..
வலிமையானவன்.. அவன் தொழும் தெய்வங்களும் நான் வணங்கும் இயற்கையும் அவனை உயிர்ப்பிக்கும்.. மீண்டு வருவான் காத்திருக்கிறேன். அன்புடன், பாரதிராஜா" என பதிவிட்டு இருந்தார். எஸ்பிபி உடல்நிலை மோசமடைந்தது என அறிவிப்பு வெளிவந்த ஆகஸ்ட் 14ம் தேதி மாலை தான் இப்படி ஒரு ட்விட்டை பதிவிட்டார் அவர்.

அதன் பிறகு தற்போது வரை எஸ்பிபி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே இருந்து வரும் நிலையில் அவர் பற்றி மிக உருக்கமாக கண்ணீர் மல்க பேசி பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

""இது ஒரு பொன் மாலை பொழுது. இன்றளவும் உலகமே கேட்டு வியந்து போகின்ற ஒரு பாடல். பொன் மாலை பொழுது நீ பாடலாம், உனக்கு பொன் மாலை பொழுது வர கூடாது. பாலு.. நான் மட்டும் இல்லடா உலகத்தில் உள்ள அதனை கலைஞர்களும் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறோம். இரண்டு நாட்களாக நான் விட்ட கண்ணீர், என் கன்னங்களில் வழியும் போது அதை துடைத்து துடைத்து எறிந்து கொண்டிருக்கிறேன்."


"இப்போது கூட இந்த பதிவில் அது வந்துவிட கூடாது என்பதற்காக நான் நிதானமாக பேச முயற்சித்து கொண்டிருக்கிறேன். பாலு வந்துருடுவடா. நான் வணங்குகின்ற பஞ்ச பூதங்கள் அத்தனையும் உண்மை என்றால் நீ மறுபடியும் வருகிறாய். மறுபடியும் எங்களோடு பழகுகிறாய். இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடுகிறாய். நீ ஒரு ஆண் குயில். வந்துடுடா பாலு" என கூறி கண்ணீர் விட்டுள்ளார்.

எஸ்.பி.பி உடல்நிலை அப்படியே தான் இருக்கிறது என அவரது மகன் சரண் நேற்று வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருந்தார். மேலும் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் எடுக்கப்பட்டுவிட்டது எனவும் நேற்று ஒரு செய்தி பரவி இருந்தது. அது முற்றிலும் பொய்யான தகவல் எனவும் அவர் விளக்கம் கூறி இருந்தார். மேலும் தொடர்ந்து பிராத்தித்து வரும் அனைவருக்கும் நன்றி என அவர் கூறி இருக்கிறார்.

எஸ்பிபி கொரோனாவில் இருந்து மீண்டு வந்து மீண்டும் பாட வேண்டும் என பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். பாடகர் மனோ நேற்று வெளியிட்டு இருந்த வீடியோவில் "அண்ணன் எஸ்பிபி அவர்கள் சீக்கிரமா குணமாக வீட்டுக்கு வரணும். அவர் நிறைய பாடல்கள் பாடணும். என்னை மாதிரி எத்தனையோ பேருக்கு inspiration அண்ணா நீங்க தான். நீங்க இன்னும் 20 வருஷம் 100% நீங்க பாடுவீங்க. அது என்னுடைய நம்பிக்கை. என் நம்பிக்கை மட்டும் இல்லை, இசை ரசிகர் பெருமக்கள் எல்லோருடைய நம்பிக்கை. கண்டிப்பாக கடவுள் உங்க கூட இருப்பார். தைரியமா இருங்க. கண்டிப்பா நீங்க வருவீங்க. பாடுவீங்க. இது நடக்கும். நன்றி" என அவர் கூறி இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்