ஆப்நகரம்

நீங்க கொடுத்த எமோஷனுக்கு நான் உதடெல்லாம் ரத்தம் வர வச்சு நடிச்சேன் பாலு: சிவகுமார்

சீக்கிரமாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வாங்க பாலு என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பற்றி சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Aug 2020, 2:47 pm
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவே கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி இரவு எஸ்.பி.பி.யின் நிலைமை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil sivakumar


எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

எஸ்.பி.பி.யின் நிலை தற்போது சீராக இருப்பதாக அவரின் மகன் சரண் தெரிவித்துள்ளார். தன் அப்பாவை நினைத்து இசை பிரியர்கள் கவலையில் இருப்பதை உணர்ந்த சரண் தினமும் அப்டேட் கொடுத்து வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்பா, நிச்சயம் குணமடைவார். ஆனால் அது ஒரே நாளில் நடக்காது. 2, 3 நாட்கள் ஆகலாம், ஒரு வாரம் கூட ஆகலாம். ஆனால் அப்பா தற்போது சிரமம் இல்லாமல் மூச்சு விடுகிறார். அப்பாவின் உடல்நலம் தேறி வருவதை பார்த்து மருத்துவர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள் என்று சரண் கூறியுள்ளார். இந்நிலையில் சிவகுமார் எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டி பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் சிவகுமார் கூறியிருப்பதாவது,
பாலு, நீங்கள் என்னைவிட நான்கு வயது சிறியவர். அதனால் நான் உங்களை தம்பி என்றே கூப்பிடலாம். உலகமே கொண்டாடக் கூடிய ஒப்பற்ற பாடகர் நீங்கள். நிறைகுடம். நூற்றுக்கும் மேலான படங்களில் எனக்காக நீங்கள் டூயட் பாடியிருக்கிறீர்கள். முதன் முதலில் நீங்கள் எனக்காக எந்த படத்தில் டூயட் பாடினீர்கள் என்பது நினைவிருக்கிறதா?. மூன்று தெய்வங்கள். முல் இல்லா ரோஜா முத்தார பொன்னூஞ்சல் கண்டேன். நினைவிருக்கிறதா?.

சிட்டுக்குருவில வர பாட்டு உலகம் முழுவதும் போய்க்கிட்டிருக்கு. என் கண்மணி உன் காதலி என்கிற பாட்டு. எல்லாத்துக்கும் மேல என்னால மறக்கவே முடியாதது. நீங்கள் என் 100வது படத்துக்கு பாடினீர்களே. மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தானு. அதுக்கு அப்புறம் உச்சி வகுடெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி. அந்த பாட்டுக்கு நீங்கள் கொடுத்த எமோஷனுக்கு 45 நாட்கள் காடு, மலை, வெயிலிலும், பனியிலும் காஞ்சு வரண்டு உதடு எல்லாம் ரத்தம் வரவச்சு நான் நடிச்சேன்.

வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை சந்தித்தவர் நீங்கள். கொரோனாவும் ஒரு சவால் தான். சீக்கிரமாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வாங்க பாலு என்று தெரிவித்துள்ளார்.

எஸ்பிபி உடல்நிலை எப்படி இருக்கிறது? மகன் SPB சரண் வெளியிட்டிருக்கும் வீடியோ

அடுத்த செய்தி

டிரெண்டிங்