ஆப்நகரம்

தன் மரணத்தை முன்பே கணித்தாரா எஸ்பிபி? ஜூன் மாதமே சிலை ஆர்டர் கொடுத்தது ஏன்

எஸ்பிபி தன்னுடைய சிலையை செய்ய ஆர்டர் கொடுத்திருக்கும் தகவல் வெளியாகி ஆச்சர்யம் அளித்துள்ளது. அவரது மரணத்தை முன்பே கணித்து விட்டாரோ?

Samayam Tamil 28 Sep 2020, 3:28 pm
பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் குரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதன் பிறகு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அதன் பிறகு சிகிச்சை பலனின்றி சென்ற வெள்ளிக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
Samayam Tamil SPB


எஸ்பிபி மறைவு சினிமாத் துறைக்கு மிகப் பெரிய பேரிழப்பு என அனைவரும் தெரிவித்து உள்ளனர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத் துறையில் பின்னணிப் பாடகராக ரசிகர்களை ஈர்த்து வந்த அவர், இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். இந்நிலையில் எஸ்பிபி கடந்த ஜூன் மாதமே செய்த ஒரு விஷயம் பற்றிய தகவல் வெளிவந்திருக்கிறது.

ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் உள்ள சிற்பி உடையார் ராஜ் குமார் என்பவரிடம் தனது பெற்றோர் சாமமூர்த்தி - சகுந்தலாம்மா ஆகியோரின் சிலையை செய்யும் படி முதலில் ஆர்டர் கொடுத்திருக்கிறார். அதற்கு பிறகு கடந்த ஜூன் மாதம் தன்னுடைய சிலையை செய்து கொடுங்கள் எனஆர்டர் செய்திருக்கிறார் எஸ்பிபி.

தன்னுடைய மரணத்தை முன்பே கணித்து விட்டாரோ என பலரும் தற்போது பேசி வருகிறார்கள். அந்த சிலையை ஆர்டர் கொடுத்த போது கொரோனா லாக் டவுன் என்பதால் தன்னால் நேரில் வர முடியாது என்றும், அதனால் போட்டோவை மட்டும் இமெயிலில் அனுப்பி வைத்திருக்கிறார். அதை பார்த்து தான் தற்போது சிலை வடிவமைத்துள்ளார் அவர்.

எஸ் பி பி சிகிச்சையில் மருத்துவமனையில் இருந்ததால் அவர் வீட்டுக்கு திரும்பிய பிறகு சிலையை அவரிடம் காட்டலாம் என சிற்பி காத்திருந்திருக்கிறார். ஆனால் எஸ்பிபி சிகிச்சை பலனின்ரி மரணம் அடைந்த செய்தி அவருக்கும் தெரிந்து அதிர்ச்சி ஆகி இருக்கிறார். தனது பெற்றோர் சிலையை நிறுவ வேண்டும் என்கிற எஸ்பிபியில் ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.

எஸ்பிபி தன்னுடைய பூர்வீக வீட்டை கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சி சங்கர மடத்திற்கு தானம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு தான் அவரது தாய் மற்றும் தந்தையின் சிலையை வைக்க அவர் விரும்பினார். அந்த சிலைகள் எஸ்பிபி ஆசைப்பட்டது போல அங்கே நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைப் போல எஸ்பிபி சிலை அங்கு வைக்கப்படுமா அல்லது அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்படும் என்பது பற்றி அவரது குடும்பத்தினர் விரைவில் அறிவிப்பு அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்பிபி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவில்லம் கட்டப்படும் என அவரது மகன் சரண் பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிபி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் வரும் நிலையில், சரண் இவ்வாறு கூறி உள்ளார்.

மேலும் இந்திய சினிமாத் துறையில் வேறு எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை செய்துள்ள நிலையில் அவரை கெளரவிக்கும் விதமாக பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. நடிகர் அர்ஜுன் அந்த கோரிக்கையை வைத்த நிலையில் கங்கை அமரனும் தான் அதற்கு முயற்சிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்