ஆப்நகரம்

நல்ல வேளை சூப்பர் ஸ்டாருடன் ஒர்க்அவுட் ஆகல: ஏ.எல். விஜய்

மதராசபட்டினத்தில் ஆர்யா கதாபாத்திரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பதாக இருந்ததா என்பதற்கு இயக்குநர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 10 Jul 2020, 8:37 am
ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா, ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த மதராசபட்டினம் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படம் மூலம் தான் இங்கிலாந்தை சேர்ந்த ஏமி ஜாக்சன் இந்திய சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு ஏமி பாலிவுட் பக்கமும் சென்றார்.
Samayam Tamil al vijay


மதராசபட்டினம் என்றுமே தனக்கு ஸ்பெஷலான படம், ஐரோப்பாவை விட்டு வெளியே வராத தான் விஜய் படத்திற்காக இந்தியாவுக்கு வந்ததாக ஏமி ஜாக்சன் தெரிவித்தார். ஆர்யா கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிப்பதாக இருந்தது என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

மகேஷ் பாபு கால்ஷீட் கிடைத்தும் விஜய் ஏன் அவரை வைத்து படம் எடுக்கவில்லை என்கிற கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கு விஜய் தற்போது பதில் அளித்துள்ளார். மதராசபட்டினம், மகேஷ் பாபு பற்றி ஏ.எல். விஜய் கூறியிருப்பதாவது,

மதராசபட்டினம் என் மூன்றாவது படம் ஆகும். அதற்கு முன்பு நான் யுடிவிக்காக பொய் சொல்லப் போறோம் படத்தை இயக்கினேன். அவர்களிடம் மகேஷ் பாபுவின் கால்ஷீட் இருந்தது. இதையடுத்து மகேஷ் பாபுவுக்கு ஏதாவது கதை வைத்திருக்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார்கள். ஆனால் அந்த நேரத்தில் என்னிடம் மதராசபட்டினம் கதை மட்டுமே இருந்தது. வேறு எந்த ஸ்க்ரிப்ட்டும் இல்லை.

ஒரு வகையில் அது ஒர்க்அவுட் ஆகாததும் நல்லது தான் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் மகேஷ் பாபுவை வைத்து படத்தை இயக்கியிருந்தால் ஹைதராபாத்தை மையமாக வைத்து எடுத்திருக்க வேண்டும். மகேஷ் பாபு சிறந்த நடிகர். ஆனால் எனக்கு ஹைதராபாத்தை பற்றி எதுவும் தெரியாது. நான் மெட்ராஸ் பையன். எனக்கு என் நகரத்தை பற்றி தான் அனைத்தும் தெரியும்.
மதராசபட்டினம் ஸ்க்ரிப்டை நான் கேமராமேன் நீரவ் சாரிடம் தான் முதலில் கூறினேன். அவர் தான் என்னை ஆர்யாவிடம் அழைத்துச் சென்றார். அது எங்களுக்கு கனவு படம் ஆகும். அந்த கனவு படம் சாத்தியமாக கல்பாத்தி அகோரம் சார் தான் காரணம். அவரும், ஆர்யாவும் தான் இந்த படம் வரக் காரணம் என்றார்.

ஹாலிவுட் நடிகை வானஸா ஹட்ஜென்ஸை தான் மதராசபட்டினம் படத்தில் வெளிநாட்டு பெண்ணாக நடிக்க வைக்க விஜய் நினைத்தாராம். ஆனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி எதுவும் நடக்கவில்லை. அதன் பிறகே விஜய் ஏமி ஜாக்சனை நடிக்க வைத்திருக்கிறார்.

ஏ.எல். விஜய் தற்போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை வைத்து தலைவி படத்தை இயக்கி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் தான் தலைவி. இந்த படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர். ஆக நடித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் தலைவி படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது. தலைவி படத்தை பெரும் பொருட்செலவில் எடுக்கிறார்கள்.

ஜெயலலிதாவாக நடிக்க ஒல்லிக்குச்சியாக இருந்த கங்கனா ரனாவத் தனது உடல் எடையை கூட்டினார். மேலும் பரதநாட்டியம் கற்றுக் கொண்டார். விஜய் காரணம் இல்லாமல் கங்கனா ரனாவத்தை ஜெயலலிதாவாக நடிக்க வைக்க மாட்டார். இந்நிலையில் ஜெயலலிதாவாக நடிக்க வேறு ஆளே இல்லை என்று மொழி தெரியாத நடிகையை நடிக்க வைக்கிறாரே இந்த விஜய் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

முன்னதாக தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அதை பார்த்தவர்கள் இது ஜெயலிலதா மாதிரி இல்லை கார்டூன் கதாபாத்திரம் மாதிரி இருக்கிறது என்று கங்கனாவை கிண்டல் செய்தார்கள். விமர்சனங்களை எல்லாம் பார்த்துவிட்டு விஜய் அமைதியாக இருக்கிறார். அதற்கு எல்லாம் தன் படத்தின் மூலம் பதில் அளிப்பார் என்று நம்பப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்