ஆப்நகரம்

பர்த்டே பாய் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரர்னு தெரியுமா?

இன்று பிறந்தநாள் கொண்டாடும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 4 Jun 2020, 10:03 am
தேன் குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 1966ம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை துவங்கினார் எஸ்.பி.பி. அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காளி மொழி படங்களில் பாடியுள்ளார். மேலும் தொலைக்காட்சி தொடர்களுக்கும் பாடல்கள் பாடியிருக்கிறார்.
Samayam Tamil sp balasubramaniam


எஸ்.பி. பி. பாடகர் மட்டும் அல்ல. அவர் ஒரு இசையமைப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகர், தயாரிப்பாளரும் கூட. 74வது பிறந்தநாள் கொண்டாடும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

எஸ்.பி.பி. அனந்தபூரில் உள்ள ஜேஎன்டியூவில் என்ஜினியரிங் படிக்க சேர்ந்தார். ஆனால் படிப்பை தொடராமல் கல்லூரியில் இருந்து நின்றுவிட்டார். அதே சமயம் அவர் சென்னை இன்ஸ்டிடியூஷன் ஆஃப் என்ஜினியர்ஸில் சேர்ந்து பல பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார். பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி. கோதண்டபாணி நடுவராக வந்த போட்டியில் பங்கேற்று தனது குரலால் அனைவரையும் அசர வைத்தார் எஸ்.பி.பி. பின்னர் கோதண்டபாணி எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரு மற்றும் வாழிகாட்டியாக மாறினார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பல ஹீரோக்களுக்கு ராசியான பாடகர் ஆவார். அதனால் அவர்களின் படங்களில் ஓபனிங் பாடலை பாடியிருக்கிறார், பாடி வருகிறார். ரஜினிக்கு ரொம்ப ராசியான பாடகர் எஸ்.பி.பி. என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு 930 பாடல்கள் அல்லது நாளுக்கு 3 பாடல்கள் வீதம் எஸ்.பி.பி. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்கிற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். படங்கள் தவிர்த்து இசை ஆல்பங்களிலும் எஸ்.பி.பி. பாடியிருக்கிறார்.

ஒரு நாளில் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்கிற பெருமையை பெற்றவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். அவர் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 12 மணிநேரத்தில் 21 பாடல்களை பாடிக் கொடுத்தார். மேலும் அவர் ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களை பாடியிருக்கிறார். இது தவிர எஸ்.பி.பி. ஒரே நாளில் 16 இந்தி பாடல்களை பாடியவர். கேளடி கண்மணி படத்தில் வந்த மண்ணில் இந்த பாடலை மூச்சு விடாமல் பாடி அசத்தினார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாட்டு பாடுவது தவிர்த்து சுமார் 72 படங்களில் நடித்துள்ளார். ஸ்வீட்டான அப்பாவாக நடிப்பதில் எஸ்.பி.பி.க்கு ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. காதலன் படத்தில் பிரபுதேவாவுடன் சேர்ந்து அவர் டான்ஸ் ஆடியதை மறக்கத் தான் முடியுமா?. அவர் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பேசுவார். மேலும் அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 46 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 6 முறை பெற்றவர். தெலுங்கு பாடல்களுக்காக 3 முறையும், தமிழ், இந்தி, கன்னட பாடல்களுக்காக தலா ஒரு முறையும் தேசிய விருது பெற்றார். மின்சார கனவு படத்தில் வந்த தங்கத் தாமரை பாடலுக்காகத் தான் எஸ்.பி.பி.க்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்