ஆப்நகரம்

கூட்டு பிரார்த்தனைக்கு பிறகு எஸ்.பி.பி. எப்படி இருக்கிறார்?: அப்டேட் கொடுத்த சரண்

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்று அவரின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Aug 2020, 9:43 am
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவே அவரை கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதித்தார்கள். தான் நலமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
Samayam Tamil sp balasubrahmanyam


கடந்த 12ம் தேதி இரவில் இருந்து அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் எஸ்.பி.பி.க்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.

இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி இசை பிரியர்கள் அனைவரும் 20.8.2020 அன்று மாலை 6 மணி முதல் 6.05 மணி வரை கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா, ரஜினிகாந்த், கமல் ஹாஸன், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தார்கள்.

அதன்படி நேற்று மாலை பலரும் எஸ்.பி.பி.யின் பாடல்களை ஒலிக்கச் செய்து அவருக்காக பிரார்த்தனை செய்தார்கள். எஸ்.பி.பி.யின் உடல்நலம் பற்றி அவரின் மகன் சரண் தினமும் அப்டேட் கொடுத்து வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

கூட்டு பிரார்த்தனை நடந்த பிறகு சரண் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

அப்பாவின் உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதனால் அப்டேட் கொடுக்க பெரிதாக எதுவும் இல்லை. இருப்பினும் நான் ஏற்கனவே கூறியது போன்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். அவருக்காக அனைவரும் செய்யும் பிரார்த்தனை நிச்சயம் அவர் விரைவில் குணமடையச் செய்யும் என்று நம்புகிறோம்.

என் அப்பாவுக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்த திரையுலகினர், ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அன்புக்கு நாங்கள் என்றும் நன்றியுடன் இருப்போம்.

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, தலை வணங்குகிறோம். இந்த பிரார்த்தனைகள் எல்லாம் வீண் போகாது. கண்டிப்பா கடவுளுக்கு மனசாட்சி இருக்கிறது. அவர் கண்டிப்பாக அப்பாவை நமக்கு மீட்டுக் கொடுத்துவிடுவார்.

அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றி. குடும்பத்தினர் சார்பாக உங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கும்பிடு. எங்களுக்கு தைரியமாக இருக்கு. நீங்கள் செய்யும் இந்த பிரார்த்தனையால் எங்கள் குடும்பம் தைரியமாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என் நன்றி என்றார்.

அப்பாவுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்தது பற்றி பேசியபோது சரண் கண் கலங்கினார். அதை பார்த்த இசை ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். அப்பாவுக்காக நாங்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். அவர் நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார் என்று இசை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

எஸ்பிபி-காக கூட்டு பிரார்த்தனை: சிவகார்த்திகேயன் உட்பட சினிமா நட்சத்திரங்கள் உருக்கமான பதிவு

அடுத்த செய்தி

டிரெண்டிங்