ஆப்நகரம்

நான் யார் குடும்பத்தையும் கெடுக்கல, பணம் பறிக்க பார்க்கிறாங்க: வனிதா விஜயகுமார்

பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறித்து வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 29 Jun 2020, 8:32 am
வனிதா விஜயகுமாருக்கும், இயக்குநரும்-வி.எஃப்.எக்ஸ். டெக்னீஷியனுமான பீட்டர் பாலுக்கும் நேற்று முன்தினம் மாலை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வட பழனி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
Samayam Tamil vanitha vijayakumar


அந்த புகாரில் எலிசபெத் கூறியிருந்ததாவது,

எனக்கும், பீட்டர் பாலுக்கும திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறோம். நாங்கள் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை. முறையாக விவாகரத்து பெற்ற பிறகே வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொள்வேன் என்று பீட்டர் பால் என்னிடம் தெரிவித்தார். ஆனால் விவாகரத்து பெறாமேலேயே பீட்டர் வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்தார்.

என் புருஷன் வனிதாவை திருமணம் செய்துவிட்டார்: பீட்டர் பாலின் மனைவி போலீசில் புகார்

எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு வனிதா விஜயகுமாரை குறை சொல்லத் துவங்கிவிட்டனர். வனிதாவின் மூன்றாவது திருமணமும் பிரச்சனையா, மோதிரம் மாற்றிய கையோடு இப்படி பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதே. வனிதா பீட்டர் பால் பற்றி விசாரிக்காமல் இப்படி அவசரப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டுவிட்டாரே. வனிதாவுக்கும், திருமணத்திற்கும் செட்டே ஆகாது போன்று என்று பலரும் விமர்சித்தார்கள்.

இதை பார்த்த வனிதா விளக்கம் அளித்துள்ளார். பீட்டர் பால் விவகாரம் குறித்து வனிதா கூறியிருப்பதாவது,

என் நலம் விரும்பிகள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு,

உங்கள் அனைவரின் அன்பு, ஆசி மற்றும் வாழ்த்துக்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் கடந்த காலத்தில் போதும் போதும் என்கிற அளவுக்கு மோசமானவைகள் மற்றும் நெகட்டிவிட்டியை பார்த்துவிட்டேன் என்பது உங்களுக்கே தெரியும். இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியாக போராடிய பிறகு இறுதியில் உண்மையான அன்பு மற்றும் சந்தோஷத்தை பார்த்துள்ளேன்.

பீட்டர் பால் அன்பான, நேர்மையான ஜென்டில்மேன். கடவுள் மற்றும் எனக்கு நெருக்கமானவர்களின் ஆசி இல்லாமல் புது வாழ்க்கையை துவங்க நான் விரும்பவில்லை. திருமணம் என்பது இரண்டு இதயங்களின் சங்கமம். என் பெயரை கெடுக்கவும், பணம் பறிக்கவும் சிலர் பிரச்சனையை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

கவனிக்க ஆள் இல்லாமல் 7 ஆண்டுகளாக தனியாக இருந்த நபரை தான் நான் சந்தித்தேன் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். திடீர் என்று அவர் லைம் லைட்டுக்கு வந்து டிரெண்டானதும் தங்களின் சுயநலத்திற்காக அவரை தவறாக பயன்படுத்துகிறார்கள். நான் யார் குடும்பத்தையும் கெடுக்கவில்லை, அப்படி நான் செய்யவும் மாட்டேன்.

பீட்டர் பாலும், நானும் கடவுள் சாட்சியாக திருமணம் செய்து கொண்டோம். நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறவில்லை, மாறும் எண்ணமும் இல்லை. அதனால் எங்கள் திருமணத்தை பதிவு செய்யவில்லை. ஒருவர் மீது மற்றொருவர் காதலில் விழுந்ததை தவிர நாங்கள் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை.

நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்கிறோம், இன்ஷா அல்லாஹ் இனியும் இருப்போம். புனித பைபிள் மீது ஆணையாக சத்தியம் செய்தது போன்று இன்ப, துன்பம் எதுவாக இருந்தாலும் மரணம் வரை நான் அவருடன் இருப்பேன். பொய்யான குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்