ஆப்நகரம்

ராயல்டி பிரச்சனை முடிந்ததா? ஒருவரையொருவர் கட்டியணைத்து தழுவிக் கொண்ட இளையராஜா – எஸ்பிபி!

நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியமும் ஒருவரையொருவர் சந்தித்து கட்டியணைத்து தழுவிக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 27 May 2019, 4:33 pm
நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியமும் ஒருவரையொருவர் சந்தித்து கட்டியணைத்து தழுவிக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Samayam Tamil aja


கடந்த 1976ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கியவர் இசைஞானி இளையராஜா. கடந்த 2017ம் ஆண்டு இளையராஜா, பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு இடையில், காப்புரிமை பிரச்சனை தொடர்பாக மோதல் எழுந்தது. திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் உலகம் கடந்து தனது இசைக் கச்சேரிகளை நடத்தினார்.

இதன் காரணமாக இளையராஜா சார்பில் எஸ்பிபி உள்பட பின்னணி பாடகர்களான சரண், சித்ரா மற்றும் கச்சேரி நடத்தும் ஒருங்கிணைப்பாளர் என்று பலருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இனிமேல், இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியில்லாமல் யாரும் பாடக்கூடாது என்றும் மீறினால், காப்புரிமை சட்டத்துக்கு எதிராகி அபராதம் செலுத்தக் கூடும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, இனிமேல், இளையராஜா பாடல்களை பாடமாட்டேன். இனிமேல், இது தொடர்பாக அறிக்கை மற்றும் கருத்து பதிவிட வேண்டாம் என்று எஸ்பிபி அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தன் மீது நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை என்று கூறி இளையராஜா பாடல்களை பாடுவேன் என்று எஸ்பிபி கூறினார். இந்த நிலையில், வரும் ஜூன் 2ம் தேதி சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், எஸ்பிபி, யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ ஆகியோர் உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதன் ஒத்திகை நிகழ்ச்சி இன்று இளையராஜாவின் ஸ்டூடியோவில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக காப்புரிமை பிரச்சனை காரணமாக விலகியிருந்த எஸ்பிபி இன்று இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு வருகை தந்துள்ளார். அப்போது, இளையராஜா மற்றும் எஸ்பிபி இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி கட்டியணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்