ஆப்நகரம்

கமல்ஹாசனை அசரவைத்த நடனம்.. வைரலான வீடியோ வெளியிட்ட நடிகருக்கு பாராட்டு

அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு நடனம் ஆடிய ரசிகரின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து பாராட்டி உள்ளார் கமல்.

Samayam Tamil 20 Jun 2020, 10:56 am
நடிகர் கமல்ஹாசன் நடனத்திற்கு என்று அதிக ரசிகர்கள் இருப்பார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுன் குமார் கமல் ஹாசனின் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு டிரெட்மில்லில் நின்றபடி நடனமாடி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. அஸ்வின் குமார் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil Kamal Haasan impressed with fans dance


அவர் கமல்ஹாசன் போலவே உடை அணிந்து ட்ரெட்மில்லில் நடனமாடியுள்ளார். அவரது தோற்றம், ஹேர் ஸ்டைல் மற்றும் பாவனைகள் கமல் ஹாசன் போலவே இருக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பது இதுதான்..

"அண்ணாத்த ஆடுறார் டிரெட்மில்லில்.. இந்த வீடியோவை பின்னர் வெளியிடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் சக கமல் ரசிகர்களுக்கு இதை காட்டாமல் இருக்க முடியவில்லை. இன்னும் பல வீடியோக்கள் இருக்கிறது. இதுதான் முதல் வீடியோ" எனக் குறிப்பிட்டுள்ளார் அவர்.

இந்த வீடியோ கமல் ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்ற நிலையில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. இந்நிலையில் அதை பார்த்துவிட்டு கமல்ஹாசனும் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

"நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!" என கமல் கூறியுள்ளார்.


நடிகர் அஸ்வின் மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பிரபலமானவர். ஜக்கோபிண்டே ஸ்வர்க்கராஜ்யம் படத்தில் நடித்ததன் மூலமாக அவர் அங்கு அதிகம் பாப்புலர் ஆனார். அடுத்து அவர் இந்திரஜித்தின் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

கமல்ஹாசன் தற்போது இந்தியன்2 மற்றும் தலைவன் இருக்கின்றான் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியன் 2 படத்தினை ஷங்கர் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு விபத்திற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது. அதனை தொடர்ந்து கொரோனா முது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் ஷூட்டிங் இன்னும் துவங்காமல் உள்ளது. முழு ஊரடங்கு முடிந்து அடுத்து சூட்டிங் மீண்டும் துவங்க அரசு அனுமதி கொடுத்தால் மீண்டும் உடனே துவங்கும் என தெரிகிறது.

இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்த பிறகு தான் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது லாக் டவுன் நேரத்தில் கமல் செய்து வருகிறார்.

மேலும் கமல்ஹாசன் அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார். சமீபத்தில் இந்திய சீன எல்லையில் நடந்த மோதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை ட்விட்டரில் தெரிவித்திருந்தார் கமல்.

"எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்" என அவர் கூறியிருந்தார்.

அடுத்த செய்தி