ஆப்நகரம்

விரைவில் அரசியலுக்கு வருகிறாரா தளபதி விஜய்?

விஜய் விரைவில் அரசியல் கட்சி துவங்க உள்ளார் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 15 Aug 2020, 6:40 pm
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் மிக அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது திரைப்படம் தியேட்டரில் வெளியானால் அதை திருவிழா போல கொண்டாடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் விஜய் தன் ரசிகர் மன்றங்கள் மூலமாக பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.
Samayam Tamil Vijay


விஜய் சினிமாவை தாண்டி அரசியலிலும் ஆர்வம் அதிகம் என ஒரு கருத்து இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதனால் அதான் அவரது படங்களில் அரசியல் கலந்த வசனங்கள் அதிகம் இடம்பெறுகின்றன என்கிற பேச்சும் உள்ளது. தமிழ்நாட்டில் சினிமா துறையையும் அரசியலையும் எப்போதும் பிரித்துப் பார்க்கவே முடியாது. காரணம் சினிமா துறையில் இருந்து வந்த நபர்கள் தான் முதலமைச்சராக ஆகும் அளவுக்கு தமிழ்நாட்டில் வளர்ந்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே நடிகர் கமல் ஹாசன் கட்சி துவங்கி விட்டார். ஆனால் இன்னும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி உறுதியான முடிவு எதுவும் எடுக்கவில்லை. அதனால் அவர் கட்சி துவங்குவாரா இல்லையா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அடுத்த வருடம் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் யாரெல்லாம் களத்தில் போட்டிக்கு வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் விஜய் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு பிரபல வழக்கறிஞருடன் பேசி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு புதிய கட்சியை பதிவு செய்வதற்காக தான் அந்த வழக்கறிஞரை அவர் அணுகி இருக்கிறார் என கூறப்படுகிறது. இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளதால் விஜய் விரைவில் அரசியலுக்கு வந்து கட்சியை துவங்க போகிறாரா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. மேலும் அடுத்த வருடம் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவாரா என்கிற கேள்வியை சமூக வலைதளங்களில் தற்போது ரசிகர்கள் வைத்து வருகிறார்கள். இது உண்மையா என்பதை விஜய் தரப்பு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். சென்ற வருடம் துவங்கிய இந்தப் படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் முடிக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி மாஸ்டர் படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு சில வாரங்களுக்கு முன்பே கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. தற்போது வரை தியேட்டர்கள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என அரசு அறிவிக்காமல் இருக்கிறது. அதனால் சினிமா துறையினர் தங்கள் படங்களை வெளியிட முடியாமல் தொடர்ந்து சிக்கலை சந்தித்து வருகிறார்கள்.

அரசு தியேட்டர்களை திறக்க எப்போது அனுமதி அளிக்கிறது என்பதை பொறுத்து தான் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கூறியிருக்கிறார். இந்த வருடம் தீபாவளி அல்லது அடுத்த வருடம் பொங்கலுக்கு மாஸ்டர் வெளியிட வாய்ப்பு உள்ளது என அவர் கூறி இருந்தார். விஜய் ரசிகர்களும் தற்போது மாஸ்டர் படத்தை எப்போது பெரிய திரையில் பார்ப்போம் என்று தான் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்