ஆப்நகரம்

இனிமேல் இப்படி பேசாதீர்கள்- பா.ரஞ்சித்திற்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு!

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Jun 2019, 4:33 pm
கடந்த 5ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் நீலப்புலிகள் அமைப்பின் சார்பில், உமர் பாருக்கின் நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் பா.ரஞ்சித் அழைக்கப்பட்டு இருந்தார்.
Samayam Tamil Pa_Ranjith_750


அப்போது பேசிய அவர், ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசினார். இதுதொடர்பாக பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பா.ரஞ்சித் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தான் கூறிய விஷயங்கள் அனைத்தும் உமர் பாரூக்கின் ”செந்தமிழ் நாட்டு சேரிகள்” என்னும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றையே பேசினேன். இந்திய குடிமகனாகிய எனக்கு பேச்சுரிமை உள்ளது.

முதல் கட்ட விசாரணை நடத்தாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? எந்த நோக்கத்தில் இவ்வாறு பேசினார்? எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு தொடர்பாக ஆதாரங்கள், ஆவணங்கள் உடன் விரிவான பதிலளிக்க திருப்பனந்தாள் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின், பா.ரஞ்சித்திற்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மீண்டும் இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அவ்வாறு பேசினால், முன் ஜாமீனை ரத்து செய்ய கீழமை நீதிமன்றத்தை போலீசார் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்