ஆப்நகரம்

வெப் சீரிஸ் தயாரிக்கும் மணிரத்னம்! 9 முன்னணி இயக்குனர்கள் கூட்டணி

பொன்னியின் செல்வன் படம் ஒரு புறம் இருக்க ஒன்பது விதமான குறும்படங்களை இணைத்து வெப் சீரிஸாக மணி ரத்னம் தயாரிக்க உள்ளார்.

Samayam Tamil 6 Jun 2020, 10:41 am
இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட பட்ஜெட் படத்தினை இயக்கி வருகிறார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் கதையை படமாக்க வேண்டும் என கடந்த பல வருடங்களாக அவர் திட்டமிட்டு வந்த நிலையில் தற்போது லைகா நிறுவனம் அந்த படத்தை தயாரிக்க முன்வந்த நிலையில் தற்போது ஷூட்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil Mani Ratnam


கொரோனா லாக்டவுன் காரணமாக பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளது. மிக குறைவான நபர்களை கொண்டு சினிமா ஷூட்டிங் நடத்த அரசு விரைவில் அனுமதி அளிக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அதற்கு பிறகும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் துவங்குவதில் சிக்கல் உள்ளது. இது வரலாற்று படம் என்பதால் ஒவ்வொரு காட்சியிலும் அதிக எண்ணைக்கையிலான துணை நடிகர்கள் தேவைப்படுவார்கள். மேலும் போர் மற்றும் சண்டை காட்சிகளை படமாக்க ஆயிரக்கணக்கானவர்கள் தேவை படுவார்கள். அதனால் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் மீண்டும் துவங்குவதில் நடைமுறை சிக்கல்கள் அதிகம் இருக்கும் என மணிரத்னம் கூறியிருந்தார்.

அதனால் பொன்னியின் செல்வனுக்கு முன்பு ஒரு சிறிய பட்ஜெட் படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார் என செய்தி பரவியது. அது ரோஜா படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது. ஆனால் மணிரத்னம் தரப்பு அதை முற்றிலும் வதந்தி என மறுத்துவிட்டது.

இந்நிலையில் தற்போது மணிரத்னம் ஒரு வெப் சீரிஸை தயாரிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் நிறுவனத்திற்காக தான் இதை அவர் தயாரிக்கிறார்.

நவரசங்களை காட்டும் வகையில் ஒன்பது வகையான குறும்படங்களை இணைத்து அந்தாலஜி வகையில் இந்த வெப் சீரிஸ் உருவாகிறது.

சிரிப்பு, பரிவு, கோபம், சாந்தம், வீரம், பயம், காதல், அருவருப்பு, அதிசயம் என ஒன்பது நவரசங்களையும் ஒன்பது குறும்படங்களாக எடுக்க உள்ளனர். அதை ஒன்பது வெவ்வேறு இயக்குனர்கள் இயக்க உள்ளனர். அதில் மணிரத்னம், கெளதம் மேனன், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்கள் பெயரும் உள்ளது.

அதனால் இந்த அந்தாலஜி வெப் சீரிஸுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா லாக் டவுன் முடிந்தபிறகும் தான் இதன் பணிகள் துவங்கி நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் மூலமாக கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை கொரோனா லாக்டவுனால் வாழ்வாதாரம் இழந்து இருக்கும் சினிமா துறை தொழிலாளர்களுக்கு உதவியாக வழங்கப்பட உள்ளது.

இதில் பணியாற்றவுள்ள இயக்குனர்கள், நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் மற்ற டெக்னீசியன்கள் பற்றிய விவரங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு தமிழ் சினிமாவிலும் பல அந்தாலஜி திரைப்படங்கள் வெளிவந்து இருக்கின்றன. குறிப்பாக சென்ற வருடம் வெளிவந்த சில்லு கருப்பட்டி என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. மனிதனின் நான்கு பருவங்களில் வரும் காதலை பற்றி நான்கு விதமான கதைகளை கொண்டிருந்து அது.

அடுத்து மணிரத்னம் அந்தாலஜி வகை வெப் சீரிஸ் இயக்க திட்டமிட்டு இருப்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்