ஆப்நகரம்

அதிகம் முடி வைத்திருந்த மொட்டை ராஜேந்திரன்: அதை இழந்தது எப்படி? அவரே கூறிய பதில்

நடிகர் நான் கடவுள் ராஜேந்திரன் தனது அழகான முடி கொட்டியது எப்படி என தெரிவித்து இருக்கிறார்.

Samayam Tamil 13 Aug 2020, 6:09 pm
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ராஜேந்திரன். இவரை மொட்ட ராஜேந்திரன் என ரசிகர்கள் அழைப்பதுண்டு. அவரது தோற்றத்தை வைத்து தான் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சினிமா விற்கு வந்த புதிதில் நல்ல முடி உடன் தான் இருந்திருக்கிறார். அவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாகி இருந்தது.
Samayam Tamil Naan Kadavul Rajendran


இந்நிலையில் ராஜேந்திரன் பேசி இருக்கும் எமோஷ்னல் வீடியோ தற்போது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்கள். அவரை பற்றி சில விஷயங்களை அவர் உருக்கமாக பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது..

"என் பெயர் ராஜேந்திரன். ஆனால் எல்லோரும் என்னை மொட்டை ராஜேந்திரன் என அன்பாக அழைக்கிறார்கள். என்னுடைய வரலாறு என்னவென்றால் என்னுடைய அப்பா பைட்டராக இருந்தார். என்னுடைய அண்ணனும் பைட்டராக இருந்தார். சின்ன அண்ணனும் அதே பணியில் தான் இருந்தார். அவர்களை பின் பற்றி நானும் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பைட்டர் ஆக நடித்திருக்கிறேன். கடைசியாக பிதாமகன் என்ற படத்தில் பாலா சார் உடன் பணியாற்றும் போது அவர் உடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அவர் என்னை நடிக்க வைத்தது பற்றி நான் சந்தோஷப்பட்டேன். அதன் பிறகு நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார். அவர் அப்படி சொன்னதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது, பயமாகவும் இருந்தது. காரணம் நான் இதுவரை பைட்டராக மட்டுமே இருந்திருக்கிறேன். வில்லனாக நடித்ததில்லை. ஆனால் அவர் தான் நம்பிக்கை கொடுத்து நீ பண்ணு நான் பார்த்துக்கிறேன் என்ன சொன்னார். அதிலிருந்து தான் நான் நடிக்க ஆரம்பித்தேன்.

அந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. என் பெயர் எல்லோருக்கும் தெரியும் அளவுக்கு ஆக்கியது அந்த படம் தான். ரொம்ப சந்தோஷப்பட்டேன், என்னுடைய முதல் குரு, முதல் தெய்வம் பாலா சார் தான். அதன்பிறகு நான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடிக்கும் போது ராஜேஷ் சார் எனக்கு காமெடி கலந்த கதாபாத்திரம் கொடுத்தார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இப்படி சீரியஸாக ஆரம்பித்து காமெடியாக என்னுடைய கேரியர் போய்க் கொண்டிருக்கிறது. காமெடி கலந்த கேரக்டர் என்னை மொட்டை ராஜேந்திரன் என அன்போடு கூப்பிடும் அளவுக்கு வளர வைத்திருக்கிறது. எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம்" என மொட்டை ராஜேந்திரன் இந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

மேலும் இதற்கு முன்பு ஒரு பேட்டியில் பேசும் போது தன்னுடைய முடி போனது எப்படி என்பது பற்றியும் பேசி இருந்தார். அவர் அந்த காலத்தில் மிக தைரியமான ஸ்டன்ட் மேன் என்பதால் பல ஆபத்தான சாகசத்தையும் துணிச்சலாக செய்வாராம். ஒரு முறை இவர் மலையாள படத்தின் ஷூட்டிங்கிற்காக வயநாடு அருகில் இருக்கும் இடத்தில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்று இருக்கிறார். அப்போது உயரத்திலிருந்து தண்ணீரில் குதிப்பது போன்ற காட்சி படமாக்கி இருக்கிறார்கள். ராஜேந்திரனும் தைரியமாக குதித்திருக்கிறார். அதன் பிறகு தான் அங்கே இருந்த மக்கள் சொல்லி இருக்கிறார்கள் அது ரசாயன ஆலை கழிவு நீர் கலந்த தண்ணீர் என்று. அப்போது அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சில தினங்கள் கழித்து அவரது தலைமுடி கொஞ்சம் கொஞ்சமாக விழ துவங்கியுள்ளது. பின்னர் மொத்தமாக அனைத்தும் காணாமல் போய்விட்டது.

இப்படித்தான் ராஜேந்திரன் தன்னுடைய தலை மொட்டை ஆனது என கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்