ஆப்நகரம்

பாடல் காப்புரிமை தொடர்பாக தவறான செய்தி வெளியிட்டால் நடவடிக்கை: இளையராஜா!

பாடல் காப்புரிமை வழக்கு தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 31 Oct 2018, 2:15 pm
பாடல் காப்புரிமை வழக்கு தொடர்பாக தவறான செய்தி வெளியிடுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று இசையமைப்பாளர் இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil ilayaraja2
பாடல் காப்புரிமை தொடர்பாக தவறான செய்தி வெளியிட்டால் நடவடிக்கை: இளையராஜா!


எக்கோ ரெக்கார்டிங் நிறுவனத்துக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.முரளீதரன், ’இது ஒரு சிவில் பிரச்சினை என்பதனால் கிரிமினல் புகார் அளிக்க முடியாது’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக இளையராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2014-ம் ஆண்டு எனது பாடல்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும். அந்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும்.

2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளித்தேன். சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சிடிக்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். நேற்று வெளியான தீர்ப்பில் நீதிபதி எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை.

இந்த வழக்குக்கும், எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் சில செய்தி நிறுவனங்கள், "இளையராஜா பாடல்கள் வழக்கு ரத்து", "இளையராஜா காப்புரிமை வழக்கு தள்ளுபடி" என தவறான செய்தி வெளியிடுகின்றனர். தவறான செய்தி வெளியிடுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் நஷ்டஈடு கோரி வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்