ஆப்நகரம்

அதற்கு வாய்ப்பே இல்லை.. ஜகமே தந்திரம் பற்றிய வதந்திக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில்

ஜகமே தந்திரம் பற்றிய வதந்திக்கு சமீபத்திய பேட்டியில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

Samayam Tamil 18 Jun 2020, 1:33 pm
தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் முதன் முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் ஜகமே தந்திரம். பேட்ட படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தினை இயக்கி உள்ளார். கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டன.
Samayam Tamil Jagame Thandhiram


கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான பெண்குயின் படம் நாளை நேரடியாக ஓடிடி இணையதளத்தில் ரிலீசாகிறது. அதற்காக விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டி ஒன்றில் ஜகமே தந்திரம் பற்றிய கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். ஜகமே தந்திரம் படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவருவதாக பரவிய வதந்தி பற்றி கேட்டதற்கு, "தற்போதைக்கு தயாரிப்பாளரிடம் அப்படி ஒரு திட்டம் இல்லை. நிச்சயமாக தியேட்டர் திறக்கப்பட்ட பிறகு ரசிகர்கள் திரைப்படங்கள் பார்க்க தியேட்டர்களுக்கு வருவார்கள். அப்போது எங்கள் படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்வோம்" என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த படம் தனுஷின் நாற்பதாவது படமாக உருவாகி உள்ளது. இது ஓடிடி தளங்களில் வெளியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஜகமே தந்திரம் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பிரேவ் ஹார்ட் போன்ற படங்களில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் மே ஒன்றாம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் அதற்கு முன்பாகவே கொரோனா முழு அடைப்பு போடப்பட்டதால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டது. அதனால் வேறு வழியின்றி ஜகமே தந்திரம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு தனுஷ் தன் கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் கிட்டத்தட்ட நடித்து முடித்து விட்டார் அவர். ஒரு சில பகுதி ஷூட்டிங் மட்டும் பாக்கி இருக்கிறது. அதன்பின் பாலிவுட்டில் அத்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து வந்தார் தனுஷ். அதன் ஷூட்டிங் முழு அடைப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் அரசு அனுமதி கொடுத்தால் அந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.

அடுத்து 43-வது படத்திற்காக தனுஷ் கார்த்திக் நரேன் உடன் கூட்டணி சேர்கிறார். அந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

அடுத்து தனது நாற்பத்தி நான்காவது படத்திற்காக சன் பிக்சர்ஸ் உடன் கைகோர்த்துள்ளார் தனுஷ். அந்த படத்தின் இயக்குனர் யார் என்பது தற்போது வரை உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு சீயான் விக்ரமின் 60 வது படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்த பேட்ட படத்தின் இரண்டாம் பாகம் வருங்காலத்தில் நிச்சயம் உருவாகும் என தெரிவித்திருந்தார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்