ஆப்நகரம்

எனது சேவை தான் காப்பாற்றியது: கொரோனா பாதிக்கப்பட்ட ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகள் குணமடைந்து டிஸ்சார்ஜ்

ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகள் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Samayam Tamil 5 Jun 2020, 10:40 am
ராகவா லாரன்ஸ் நடத்திவரும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது. 18 குழந்தைகள் மற்றும் 3 பணியாளர்கள் என மொத்தம் 21 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை கொரோனா தனிமைப்படுத்தும் முகாமிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
Samayam Tamil Raghava Lawrence


இந்நிலையில் தற்போது அவர்கள் அனைவரும் குணமாகி திரும்பிவிட்டதாக மகிழ்ச்சியான செய்தியை லாரன்ஸ் வெளியிட்டுள்ளார்.

இது பற்றி முகநூலில் வெளியிட்டு உள்ள அவர் கூறி இருப்பது இது தான்..

"நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம். நான் ஒரு நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எனது டிரஸ்டின் குழந்தைகளுக்கு தற்போது டெஸ்டில் நெகட்டிவ் என வந்ததால் பாதுகாப்பாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். குழந்தைகள் டிரஸ்டுக்கு மீண்டும் திரும்பி வந்துவிட்டனர்."

"எஸ்.பி. வேலுமணி சார், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் சார் ஆகியோர் உடனடியாக உதவி செய்ததற்கு இதயபூர்வமான நன்றியை கூறி கொள்கிறேன். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் அவர்களது தன்னலமற்ற சேவைக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்."

"நான் நம்பியது போலவே என்னுடைய சேவை குழந்தைகளை காப்பாற்றியுள்ளது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சேவை தான் கடவுள்" என ராகவா லாரன்ஸ் தனது பதிவில் தெரிவித்து உள்ளார்.


கொரோனா பிரச்சனை துவங்கியதில் இருந்தே ராகவா லாரன்ஸ் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அவர் அடுத்து நடிக்க உள்ள சந்திரமுகி 2 படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை 3 கோடி ரூபாயை அப்படியே கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார். மத்திய அரசுக்கு ரூ. 50 லட்சம் ரூபாய், மாநில அரசுக்கு ரூ. 50 லட்சம் ரூபாய், FEFSI க்கு 50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ. 50 லட்சம், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 25 லட்சம், சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள தின கூலி வேலை செய்பவர்களுக்கு ரூ. 75 லட்சம் என தனது உதவியை பிரித்து வழங்கினார் அவர்.

அதற்கு பிறகும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ. 25 லட்சம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு 15 லட்சம், நடிகர் சங்கத்திற்கு ரூ. 25 லட்சம் என உதவி செய்தார். மேலும் பாலிவுட்டில் லாரன்ஸ் இயக்கி வரும் லக்ஷ்மி பாம் படத்திற்காக வரவேண்டிய சம்பளத்தையும் நேரடியாக மத்திய அரசின் PM Cares நிதிக்கு வழங்கி விடும்படி தயாரிப்பாளருக்கு கூறிவிட்டார் லாரன்ஸ்.

இது மட்டும் இன்றி, கொரோனா லாக் டவுனில் உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு தனது தாய் பவுண்டேஷன் மூலமாக அவர் உணவு, அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு திருமுல்லைவாயில் பகுதியில் தங்கி இருந்த நரி குறவர்களுக்கு உணவு தானிய பொருட்களை லாரன்ஸ் வழங்கினார். ரேஷன் கார்டு கூட இல்லாமல் தவிக்கும் அவர்கள் பட்டினியாக இல்லாமல் இருக்க இது உதவும் என அவர் தெரிவித்து இருந்தார்.

இப்படி தான் மக்களுக்காக செய்த சேவைகள் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளை காப்பாற்றியது என லாரன்ஸ் நம்புகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்