கார்த்திக் சுப்புராஜ் , தனுஷ் கூட்டணியில் .உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படத்திற்கு வெறித்தனமாக காத்திருக்கின்றனர் தனுஷ் ரசிகர்கள். திரையரங்கில் கொண்டாடலாம் என நினைத்த இந்த திரைப்படம் நெட்பிளிக்சில் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் விளம்பரத்திற்காக சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிரபலமாகி வரும் ஸ்பேஸ் உரையாடல் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 'ஜகமே தந்திரம்' படத்தின் முழுமையான பாடல்கள் வெளியிடப்பட்டன. இசை வெளியீட்டை முன்னிட்டு, 'ஜகமே தந்திரம்' படத்தின் இசைக் குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினார்கள். இதனை அலெக்சாண்டர் பாபு தொகுத்து வழங்கினார். இதில் நடிகர் தனுஷும் கலந்துகொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்நிலையில் 'ஜகமே தந்திரம்' ஆல்பத்தில் ஜோசப் விஜய் என்ற பெயர் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அது நடிகர் விஜய்யின் பெயர் என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர். இது தொடர்பான மீம்களும் வெளியாகி வந்தன. தனுஷ் திரைப்படத்தில் விஜய் பாடியுள்ளரா? என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ட்விட்டர் ஸ்பேசஸ் உரையாடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இதுகுறித்து கேட்கப்பட்ட போது, அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, 'ஜோசப் விஜய் என்பவர் என்னுடைய இசைக் குழுவில் கிதார் வாசிக்கும் ஒரு கலைஞர். என்னுடைய பாடல்களுக்கு அவர் கிதார் வாசித்து வருகிறார்'. அவர் பெயர் தான் ஜகமே தந்திரம் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.