தில்
2001ம் ஆண்டு வெளியான தில் படத்தை விக்ரம் நடிப்பில் தரணி இயக்கியிருந்தார். விக்ரம் ஜோடியாக லைலா நடித்திருந்தார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி நடித்தார். இந்த படத்தில் வித்யாசாகர் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் ரகம்.
பா விஜய் எழுதிய தில் பாடலும், மச்சான் மீச வீச்சறுவாள் பாடலும் மிகவும் பிரபலமானது. கபிலன் எழுதியிருந்த உன் சமையறையில் பாடல் அப்போதைய இளம் காதலர்களின் கீதமாகவே மாறியது. உன்னி கிருஷ்ணன், சுஜாதா இருவரின் குரலும் கேட்போரை கட்டிப்போட்டது என்றே சொல்லலாம்.
ரன்
மாதவன் நடிப்பில் ரன் படம் 2002ம் ஆண்டு வெளியானது. மாதவன் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருப்பார். இந்த படத்தில் ரகுவரன், அதுல் குல்கர்னி, விவேக் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள்.
வித்யாசாகர் இசையில் இந்த படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட் ஆனது. நா முத்துக்குமார் வரிகளில் தேரடி வீதியில் தேவதை பாடல் நம்மை ஆட்டம் போட வைக்கும். தாமரை வரிகளில் பொய் சொல்ல கூடாது காதலி பாடல் அந்த வருடத்தின் பிரபலமான காதல் பாடலாக அமைந்தது. இளைஞர்கள் மிகவும் விரும்பும் வரிகளும், இசையும் சேர்ந்து அந்த பாடலை ஹிட்டாக்கியது.
மின்சாரம் என்மீது பாய்கின்றதே , இச்சுத்தா இச்சுத்தா உள்ளிட்ட பாடல்கள் புத்துணர்ச்சியை கூட்டக்கூடியவையாக அமைந்தது.
தூள்
விக்ரம் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான தூள் படம் அவரின் ஹிட் படங்களில் மிக முக்கியமானது. விக்ரமுக்கு மாஸ் ஆக்டர் பெயர் வாங்கிக்கொடுத்த படம் தூள். இந்த படத்தில் அவர் கிராமத்து ஆளாக நடித்திருப்பார். ஜோதிகா அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். அவருடன் விவேக், சாயாஜி ஷின்டே, பசுபதி, ஆகியோர் நடித்திருப்பார்கள்.
இந்த படத்தில் வரும் பின்னணி இசை பெரும்பாலும் பலருக்கும் பிடித்துப்போனது. இந்த படத்துக்கு பா விஜய் 3 பாடல்களை எழுதியுள்ளார். இத்தணூண்டு முத்தத்திலே, ஆசை ஆசை இப்பொழுது, இந்தாடி கப்ப கிழங்கே பாடல்கள் மூன்றும் மூன்று ரகமாக அமைந்தது. நா முத்துக்குமார் எழுதியிருந்த கொடுவா மீச அருவா பார்வ பாடல் மாணிக்க விநாயகம் குரலில் கர்ஜித்தது. அது விக்ரமுக்கு இன்ட்ரோ சாங்காக அமைந்தது.
அறிவுமதி எழுதிய மதுரவீரன்தானே பாடலில் விக்ரம் ஃபைட்டர்ஸ்கள காத்துல பறக்கவிடுவார். பின்னணியில் பாடலும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த வருடங்களில் இது மிகவும் பேசப்பட்ட டெக்னிக்.
அன்பே சிவம்
கமல்ஹாசனின் மற்றுமொரு வித்தியாசமான முயற்சியாக 2003ம் ஆண்டு வெளியான படம் அன்பே சிவம். இதன் கதையை அவரே எழுதியிருந்தார். சுந்தர் சி இயக்கியிருந்தார்.
வித்யாசாகர் இசையில் இந்த படத்தின் பெரும்பான்மை பாடல்கள் நன்றாக இருக்கும். யார் யார் சிவம், பூவாசம் புறப்படும் பெண்ணே பாடல்கள் காதலையும் அன்பையும் போதிப்பவையாக இருக்கும்.
ஏல மச்சி மச்சி பாடல் நமக்குள் ஒரு புத்துணர்ச்சியை உருவாக்குவதாக அமைந்திருக்கும்.
கில்லி
விஜய்யின் வெற்றிப் படங்களில் மிக முக்கியமானவையாக கருதப்படும் கில்லி திரைப்படம் 2004ம் ஆண்டு வெளியானது. விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார். தரணி இயக்கத்தில் வெளியான இந்த படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருப்பார்.
இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் மாஸ் ஹிட் என்றே சொல்லலாம்.
கபடி கபடி பாடல் விஜய்க்கும், ஷா ல லா பாடல் த்ரிஷாவுக்கும் பெஸ்ட் இன்ட்ரோ சீனாக அமைந்தது. அர்ஜூனரு வில்லு பாடல் இப்போதும் கூட புத்துணர்ச்சிக்கான பாடலாக இருக்கிறது. அப்படி போடு பாடல் இந்தியாவின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தபாடல். கொக்கர கொக்கர கோ பாடல் நம்மை ஆட்டம் போட வைக்கும் ரகத்தை சேர்ந்தது.
சந்திரமுகி
ரஜினிகாந்த் நடிப்பில் 2005ம் ஆண்டு உருவான படம் சந்திரமுகி. இந்த படத்துக்கு இசையமைத்திருந்த வித்யாசாகர் ரஜினிக்கு இன்ட்ரோ சாங்க்காக தேவுடா தேவுடா பாடலையும், வேட்டையனுக்காக ரா ரா பாடலையும் சிறப்பாக அமைத்து கொடுத்திருந்தார். கொக்கு பற பற பாடலும் அதில் வரும் பாஞ்சிப் பாயுற பட்டம் வரிகளும் நம்மை ஆட்டம் போட வைக்கும். ரஜினிக்கே உண்டான ஸ்டைலில் அந்த மியூசிக் சிறப்பாக அமைந்திருக்கும்.
அண்ணனோட பாட்டு பாடல் அந்த காலத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட பாடல் வகையைச் சேர்ந்தது.
அபியும் நானும்
2008ம் ஆண்டு வெளியான அபியும் நானும் படத்தில் வரும் பாடல்கள் நமக்கு ஏதோ ஒரு உணர்வைத் தூண்டுபவையாகவும், தந்தைக்கு மகளுக்கும் இடையேயுள்ள பாசத்தை இசை வழியாக ஊட்டுபவையாகவும் அமைந்திருக்கும்.
முக்கியமாக வா வா என் தேவதையே பாடல் மது பாலகிருஷ்ணன் குரலில் நம்மையே உருக்கிவிடும் ஒரு உணர்வை தரும். ஒரே ஒரு ஊரிலே பாடல் நமக்கு மகிழ்ச்சியை தரும். இன்னும் பல பாடல்கள் நமக்கு மிகவும் இனிமையானதாகவும், பாசத்தை ஊட்டுவதாகவும் அமைந்திருக்கும்.