ஆப்நகரம்

வாக்கிங் செல்லும் சூப்பர்ஸ்டார் ரஜினி: பண்ணை வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்

நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வாக்கிங் செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

Samayam Tamil 22 Jul 2020, 11:21 am
கடந்த இரண்டு தினங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் புகைப்படங்கள் தான் இணையத்தில் அதிக அளவில் வைரல் ஆகிக் கொண்டிருக்கின்றன. மாஸ்க் அணிந்தபடி விலை உயர்ந்த லம்போகினி காரினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓட்டிச் செல்வது போன்ற புகைப்படம் சமீபத்தில் மிகப் பெரிய அளவில் வைரலாகி இருந்தது.
Samayam Tamil Rajinikanth


இந்த புகைப்படம் பார்த்த நெட்டிசன்கள் ஹேஷ்டேக் பதிவிட்டு இந்த புகைப்படத்தை அதிகளவில் வைரல் ஆக்கினர். ரஜினி கார் ஓட்டிக் கொண்டிருக்க, இந்த புகைப்படத்தை கிளிக் செய்தது யார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதத்தில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி இருந்தது. ரஜினியின் மகள் சௌந்தர்யா மற்றும் அவரது கணவர் விசாகன் இருவரும் சூப்பர் ஸ்டாருடன் அந்த காருக்கு முன்பு நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அது மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் அந்த புகைப்படம் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்தின் பண்ணை வீட்டில் தான் எடுக்கப்பட்டது என தகவல் பரவியது.

அதனை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி பண்ணை வீட்டில் நடை பயிற்சி செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. அதிக மரங்கள் உள்ள இடத்தில் ரஜினிகாந்த் உடற்பயிற்சிக்கான உடையில் நடந்து செல்வது அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. வழக்கமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டில் இருந்தாலும் அதிகாலையில் நடைபயிற்சி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நிலையில் அங்கும் உடற்பயிற்சி செய்யத் தவறவில்லை அவர். இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் அதிக அளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


கொரோனா வைரஸ் லாக் டவுன் போடப்படும் முன்பு வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் தான் நடித்துக் கொண்டிருந்தார். சிறுத்தை சிவா இயக்கி வரும் அந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். முதலில் இந்த வருட தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்தப் படம் கொரோனா பிரச்சினை வெடித்த பிறகு அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்து இருந்தது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் மீண்டும் ஷுட்டிங் துவங்காத நிலையில் பொங்கல் ரிலீஸில் இருந்தும் அந்த படம் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது.

மேலும் நிறுத்தப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங்கை அடுத்த வருடம் தான் மீண்டும் துவங்க வாய்ப்பு உள்ளது என தகவல் சமீபத்தில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. ஷுட்டிங் துவங்கினால் அதிக அளவிலான நபர்கள் ஒரே இடத்தில் கூட வேண்டியிருக்கும் என்பதால் அனைவரின் பாதுகாப்பு கருதியும் ஷுட்டிங்கை அடுத்த வருடம் துவங்கி கொள்ளலாம் என ரஜினிகாந்த் முடிவெடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கிறார் என கூறப்பட்டு வருகிறது. அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் வகையில் தான் படத்தின் கதை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அண்ணாத்த என தலைப்பு வைத்ததற்கு அது தான் காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்