ஆப்நகரம்

4வது முறையாக கே.வி. ஆனந்துடன் சேரும் சூர்யா: அயன் 2 ?

சூர்யா அடுத்ததாக கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 17 May 2020, 3:22 pm
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் காப்பான். கே.வி. ஆனந்த் இயக்கிய அந்த படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு இருந்தது. அந்த படத்திற்கு பிறகு சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்தார். சூரரைப் போற்று படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள்.
Samayam Tamil suriya


கொரோனா வைரஸ் பிரச்சனையால் சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் சூர்யா மீண்டும் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றும், அதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் துவங்குமாம். லாக்டவுன் முடிந்த பிறகு சூர்யா-கே.வி. ஆனந்த் கூட்டணி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான அயன் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா, கே.வி. ஆனந்த் கூட்டணியில் ஏற்கனவே அயன், மாற்றான், காப்பான் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர்கள் நான்காவது முறையாக சேர்ந்து படம் பண்ண திட்டமிட்டுள்ளது உண்மை தான் என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் அது அயன் படத்தின் இரண்டாம் பாகமா அல்லது புதுக் கதையா என்பதை தற்போதைக்கு சொல்ல முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. மேலும் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க உள்ளார். லாக்டவுன் முடிந்த பிறகு சூர்யா ஹரி படத்தில் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் வரும் 29ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. பொன்மகள் வந்தாள் படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட முடிவு செய்ததற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இருப்பினும் தற்போதுள்ள நிலையை கருத்தில் கொண்டு சூர்யா தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

அதற்கு முன்பு ஜோதிகா விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது எடுத்த வீடியோ தற்போது பெரிய பிரச்சனையானது. அந்த வீடியோவில் ஜோதிகா கூறியதாவது, கோவில்களை போன்றே மருத்துவமனைகளும், பள்ளிகளும் முக்கியமானவை தான். அதனால் அவற்றுக்கும் நிதி அளிக்க வேண்டும். நான் தஞ்சைக்கு படப்பிடிப்புக்காக சென்றபோது அங்கிருந்த மருத்துவமனை மோசமான நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அங்கு நான் பார்த்ததை கூற முடியாத அளவுக்கு நிலைமை மோசம் என்றார்.

ஜோதிகா எப்படி கோவில்களை பற்றி அப்படி சொல்லலாம் என்று ஒரு கோஷ்டி கிளம்பியது. ஆனால் சூர்யா தன் மனைவி ஜோதிகாவுக்கு பக்கபலமாக நின்றார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட ஜோதிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா எப்பொழுதோ பேசிய வீடியோவை தற்போது பார்த்துவிட்டு பிரச்சனை செய்தார்கள். கொரோனா லாக்டவுனால் வீட்டில் சும்மா இருப்பவர்கள் பழைய விஷயங்களை எல்லாம் தேடிப் பிடித்து பார்த்துக் கொண்டிருப்பதால் வந்த விவகாரம் இது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்