ஆப்நகரம்

6 தசாப்தங்கள், பல ஆயிரம் பாடல்கள்: பத்ம பூஷன் விருதை நிராகரித்த பாடகி எஸ்.ஜானகி பிறந்தநாள் இன்று

பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகியின் 82வது பிறந்தநாள் இன்று.

Samayam Tamil 23 Apr 2020, 11:30 am
எஸ்.ஜானகி - காலத்தை தாண்டி நிலைத்து நிற்கும் பாடல்களை பாடியவர் இவர். "செந்தூரப் பூவே", "ஊரு சனம் தூங்கிருச்சி" போன்ற இவரது பாடல்களை தற்போது கேட்டாலும் நம்மை மெய்மறந்து ரசிக்க வைக்கும் எஸ்.ஜானகியின் குரல். "Nightingale of South Indian Cinema" என அவரை பலரும் பாராட்ட இது தான் காரணம்.
Samayam Tamil S.Janaki


17 மொழிகளில் சுமார் 48 ஆயிரம் பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய மொழில்களில் பாடியுள்ள அவர், ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் சிலவற்றிலும் பாடியுள்ளார். அவர் அனைத்து மொழிகளிலும் கச்சிதமான உச்சரிப்போடு பாடக் கூடியவர்.

மற்ற பாடகர்களை போல இல்லாமல் எஸ்.ஜானகிக்கு ஒரு திறமை உண்டு. தனது குரலை விதவிதமாக மாற்றி பாடக்கூடியவர். இந்த வயதிலும் அவரால் ஒரு குழந்தையின் குரலில் பாட முடியும். ஜானகி ஏதாவது டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் அவரை நிச்சயம் குழந்தை குரலில் பாட வைத்து விடுவார்கள். அதையும் நாம் வியந்து பார்த்திருக்கிறோம்.

பாரம்பரிய இசையில் பாடல்கள் உருவாக்கிய இளையராஜா முதல் தற்போதைய இசை கருவிகள் வைத்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் வரை அனைத்து விதமான பாடல்களையும் பாடியுள்ளார்.

எண்ணற்ற பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார் எஸ்.ஜானகி. 4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள், தமிழ்நாடு அரசு வழங்கிய கலைமாமணி பட்டம் என அவரது திறமைக்கு கிடைத்த விருதுகள் ஏராளம்.

2013ல் அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருதை வழங்கியது, ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார். "55 வருடமாக பாடிக்கொண்டிருக்கிறேன். என் ரசிகர்கள் எனக்கு கொடுத்த அங்கீகாரத்தை தான் சிறந்த விருதாக கருதுகிறேன். நான் அரசை குறை கூறவில்லை. ஆனால் மிக தாமதமாக வழங்கப்பட்டுள்ள இந்த பத்ம பூஷன் விருதை ஏற்க மாட்டேன்" என கூறியிருந்தார் ஜானகி.

3 வயதில் பாடத்துவங்கிய ஜானகி சுமார் 20 வயது இருக்கும்போது சென்னை வந்து சினிமாவில் பாட துவங்கினார். விதியின் விளையாட்டு என்ற படத்தில் பாடியதன் மூலம் தனது பயணத்தை 1957ல் துவங்கினர் ஜானகி. சுமார் 60 வருடங்கள் சினிமாவில் 48 ஆயிரம் பாடல்கள் பாடிய அவர் 2016ல் தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்து தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

சென்ற வருடம் அவர் மைசூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற போது கால் தடுக்கி கீழே விழுந்து இடுப்பில் அவருக்கு எழும்பு முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இன்று அவரது 82வது பிறந்தநாள். மனதை மயக்கும் பல பாடல்கள் கொடுத்த அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்