ஆப்நகரம்

2 விஷயத்திற்காக விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்: வையாபுரி

விவேக் ஏன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்று அவரின் நண்பரும், நடிகருமான வையாபுரி தெரிவித்துள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 25 May 2021, 3:35 pm
நகைச்சுவை நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான காரணத்தை வையாபுரி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil this is why vivek took covid vaccine vaiyapuri
2 விஷயத்திற்காக விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்: வையாபுரி


விவேக்

தன் நகைச்சுவையால் நம்மை எல்லாம் சிரிக்க வைத்ததோடு மட்டும் அல்லாமல் சிந்திக்கவும் வைத்தவர் சின்ன கலைவாணர் விவேக். படங்களில் நடிப்பதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று இருந்துவிடாமல் மரக்கன்றுகளை நட்டு வைத்து பலருக்கும் முன்மாதிரியாக இருந்து வந்தார். அவர் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவ-மாணவியருடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்து வந்தார். விவேக்கை பார்த்து பலரும் மரக்கன்றுகளை நடத் துவங்கினார்கள். அப்படி யாராவது மரக்கன்று நட்டு வைத்து அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டால் அதை பார்த்து விவேக் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

கொரோனா

விவேக் மரக்கன்றுகள் நடுவதில் தீவிரம் காட்டிய நேரத்தில் தான் கொரோனாவின் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் நல்லது என்று அரசு மக்களிடம் கூறியது. ஆனால் தடுப்பூசி போடுவதில் மக்களுக்கு தயக்கம் இருந்தது. தடுப்பூசி போட்டால் உயிர் போய்விடுமோ என்கிற பயம் சிலருக்கு. இதை எல்லாம் பார்த்த விவேக் தடுப்பூசி விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.

தடுப்பூசி

ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் விவேக். மக்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் தடுப்பூசி போட்ட மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என மக்கள் பேசத் துவங்கினார்கள். ஆனால் தடுப்பூசிக்கும், விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்தார்கள்.

வையாபுரி

விவேக் ஏன் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்று நடிகர் வையாபுரி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பாக இருக்கும் பயத்தையும் போக்கவே விவேக் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்றார். விவேக் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பி செய்த காரியம் வேறு மாதிரி ஆகிவிட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்