ஆப்நகரம்

Aramm: அரங்கேறும் அறம் பட காட்சிகள்: குழந்தையை மீட்க போராடும் மீட்புக் குழு!

திருச்சி அருகிலுள்ள நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க மீட்புக் குழுவினர் தொடர்ந்து போராடி வருவது நயன்தாராவின் அறம் படத்தை நினைவிற்கு கொண்டு வந்துள்ளது.

Samayam Tamil 26 Oct 2019, 6:13 pm
திருச்சி அருகிலுள்ள நடுகாட்டுப்பட்டியில், நேற்று மாலை 5.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவறிந்த மீட்புக் குழுவினர் சுஜித்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது குழந்தை 75 அடி ஆழத்தில் இருக்கும் நிலையில், ஒரு மீட்டர் அகலத்தில் குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Aramm Nayanthara


இந்த சம்பவத்தை பார்க்கும் போது கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வந்த அறம் படம் தான் நினைவிற்கு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றை மூட வேண்டும் என்பதை இயக்குனர் கோபி நயினார் வலியுறுத்தியிருந்தார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடியிருந்தால், தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடக்கும் காட்சிகளை பார்த்தால், அறம் படத்தில் நடந்தது போன்று தோன்றுகிறது.

அறம் பட காட்சிகள்:

காட்சி 1: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி தன்ஷிகா.

காட்சி 2: மீட்புக் குழுவினர் வரும் வழியில், வாகனம் பழுதடைந்துள்ளது.

காட்சி 3: குழந்தையுடன் போனில் பேசும் உறவினர்கள்.

காட்சி 4: மாவட்ட ஆட்சியர் நயன்தாரா, கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார், போலீஸ் அதிகாரிகள், ஆம்புலன்ஸ் சேவையும் வருகை

காட்சி 5: கயிற்றை பிடித்துக் கொண்டு குழந்தை தஷிகா மேலே வரும் காட்சி

காட்சி 6: ஆனால், பாதியிலேயே கயிற்றை விட்ட தன்ஷிகா, மீட்கும் பணியில் தொய்வு.

காட்சி 7: இறுதியில், தன்ஷிகாவின் சகோதரர் காலில் கயிற்றை கட்டி, அவரை ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கி தன்ஷிகாவை பத்திரமாக மீட்டனர் மீட்புக் குழுவினர்.

இப்படத்தின் மூலம், ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்று கோபி நயினார் வலியுறுத்தியிருந்தார்.


திருச்சி நிஜ சம்பவம்

நிகழ்வு 1: நேற்று மாலை 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுஜித் 26 ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம்

நிகழ்வு 2: 6.30 மணிக்கு மீட்புக் குழுவினர் வருகை

நிகழ்வு 3: அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மருத்துவர்கள் என்று எல்லோருமே சுஜித்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நிகழ்வு 4: கயிறு கட்டி 26 அடியிலிருந்து குழந்தையை மீட்கும் போது தவறி 70 அடி ஆழத்திற்குள் சென்ற சுஜித்.

நிகழ்வு 5: கருவி மூலம் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது 70 அடியிலிருந்து தவறி 75 அடி ஆழத்திற்குள் சென்ற சுஜித்.

நிகழ்வு 6: இப்படி தொடர்ந்து மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் 1 மீட்டர் அகலத்தில் குழி தோண்டி சிறுவனை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடுக்காட்டுப்பட்டி சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் வேலூர், தேனி ஆகிய இரு மாவட்டங்களிலும், பாதுகாப்பற்ற முறையில் கைவிடப்பட்டு மற்றும் பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட, ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற சம்பவம் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களை உள்வாங்கி, கடினமாக உழைத்து தனக்கே உரிய பாணியில் இயக்குநர் கோபி நயினார் அறம் படத்தை இயக்கியுள்ளார். இதன் மூலம் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்த சம்பவம் குறித்து இயக்குநர் கோபி நயினார் கூறுகையில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தைகளை மீட்க அதி நவீனங்கள் இயந்திரங்கள் கண்டுபிடிக்க வேண்டும். குழந்தை விழுந்த 10 நிமிடத்தில் மீட்க தேவையான அறிவியல் தொழில்நுட்பம் நம்மிடம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அறம் படத்தைப் போன்று நிஜ சம்பவத்தில் சுஜித் மீட்கப்படுவான் என்று நாம் நம்புவோம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்