ஆப்நகரம்

சர்ச்சைகளை கிளப்பிய ஜோதிகாவின் பேச்சிற்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்: இயக்குனர் நெகிழ்ச்சி!

நடிகை ஜோதிகா தஞ்சாவூர் பெரிய கோயில் பற்றி பேசிய பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ‘உடன்பிறப்பே’ படத்தின் இயக்குநர் இரா.சரவணன் தனது முகநூலில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Samayam Tamil 21 Aug 2021, 10:38 am
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஜோதிகா, தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவருகிறார். அந்த வகையில், தற்போது இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தனது முகப்புத்தகத்தில் ஜோதிகா குறித்து பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Jyothika
Jyothika


ஜோதிகா நடித்து வரும் ‘உடன்பிறப்பே’ படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. இப்படத்தில் நடித்தது குறித்து ஒரு விருது விழா மேடையில் பேசிய ஜோதிகா, படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகே இருந்த ஓர் அரசு மருத்துமனை முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாகக் கூறினார். மேலும் கோவில்களுக்கு செலவழிப்பதை விட அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்த செலவழிக்க வேண்டும் என்று ஜோதிகா பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

பின்னர், அந்த மருத்துவமனையை சீரமைக்க நடிகை ஜோதிகா தன்னுடைய சார்பில் ரூ. 25 லட்சம் நன்கொடையாக வழங்கினார். இந்நிலையில், ஜோதிகாவின் பேச்சிற்குப் பிறகு அந்த மருத்துவமனையில் நடந்த மாற்றங்கள் என்ன என்பது குறித்து ‘உடன்பிறப்பே’ பட இயக்குநர் இரா. சரவணன் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், "தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அருகே ஷூட்டிங் நடந்தபோது அங்கே கர்ப்பிணிகளும் பிரசவமான தாய்களும் காத்துக் கிடந்ததை ஜோதிகா பார்த்தாங்க. முதல் நாள் டெலிவரியான குழந்தையோட ஒரு தாய் வராண்டாவில் உட்கார்ந்திருந்தது அவங்களை ரொம்ப அதிர வைத்தது. அந்த ஆதங்கத்தையும் பரிதாபத்தையும்தான் அவங்க பேசினாங்க. பேச்சோட நிற்கலை. அந்த மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதி கொடுத்தாங்க.

அவங்க பேச்சு பரபரப்பான நிலையில், அந்த மருத்துவமனையை மேம்படுத்த தமிழக அரசே நிதி ஒதுக்கியது. அப்போது டீனாக இருந்த மருதுதுரை சார், மருத்துவமனையைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார். மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தியபோது, பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டன. ஜோதிகா பேசியதால் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் இதெல்லாம்" என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் இரா. சரவணன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்